சென்னை : ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல சிஎஸ்கே அணி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அடைந்த தோல்வியடைந்தது. இந்த தோல்வி சிஎஸ்கே அணி ரசிகர்களை சோகத்தில் தள்ளியுள்ளது. இதுவரை சிஎஸ்கே அணி விளையாடியுள்ள 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வி உட்பட 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

இதனால் பிளே ஆஃப் சுற்றில் சிஎஸ்கே அணி கால் பதிக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி இன்னும் 6 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் 3 போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்திலும், 3 போட்டிகளை வேறு மாநிலத்திலும் விளையாடவுள்ளது. ஐதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளது.
அதேபோல் பஞ்சாப், குஜராத் மற்றும் ஆர்சிபி ஆகிய அணிகளுக்கு எதிராக வெளி மாநிலத்திலும் விளையாடவுள்ளது. இதில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு எதிராக கடந்த சீசனிலேயே சிஎஸ்கே சொந்த மண்ணில் தோல்வியை தழுவியது. இந்த இரு போட்டிகள் மட்டுமல்லாமல் அடுத்ததாக விளையாடவுள்ள ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே அணி கட்டாயம் வெற்றிபெற வேண்டும்.
அதேபோல் பஞ்சாப் அணிக்கு எதிராக தரம்சாலா மைதானத்தில் சிஎஸ்கே அணி வெற்றிபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குஜராத் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான விஷயமல்ல என்பதும், ஆர்சிபி அணி இரண்டாம் பாதியில் எழுச்சியை பெற வாய்ப்புள்ளதால் கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெறுவதும் எளிதல்ல என்று பார்க்கப்படுகிறது.
இன்னும் 4 போட்டிகளில் வென்றாலே சிஎஸ்கே அணியால் பிளே ஆஃப் சுற்றில் கால்பதிக்க முடியும் என்றாலும், புள்ளிப்பட்டியலில் டாப்பில் இருக்கும் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தால் நிச்சயம் பிரச்சனையை சந்திக்க நேரிடும். இதனால் சொந்த மண்ணில் விளையாடும் போட்டியே சிஎஸ்கே அணிக்கு வாழ்வா, சாவா போட்டியாக அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.