சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் புதிதாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக 2008 முதல் இடம் பெற்று வந்த தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகி அடுத்த தலைமுறை கேப்டனை அடையாளம் காட்டி இருக்கிறார்.
ஆனால், 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இல்லை எனக் கூறி இருக்கிறார் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து. மேலும், தோனி சிஎஸ்கே அணியில் இருக்கும் வரை ருதுராஜ் கெய்க்வாட் முழு அளவில் கேப்டனாக செயல்பட முடியாது எனவும் கூறி அதிர விட்டு இருக்கிறார்.

2024 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாகவே அணியை வழிநடத்தி வருகிறார். ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சிஎஸ்கே அணி முதல் ஏழு போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்று இருக்கிறது. அந்த அணியின் மூன்று தோல்விகளும் கூட மோசமான தோல்விகள் என கூறி விட முடியாது. மேலும், அந்த தோல்விகள் அனைத்தும் மற்ற அணிகளின் சொந்த மைதானங்களில் தான் நிகழ்ந்தது.
அந்த வகையில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் செயல்பாட்டை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஆனால், நவ்ஜோத் சிங் சித்துவோ, தோனியே சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருப்பதாக கருதுவதாக கூறி இருக்கிறார். இது பற்றி சித்து கூறுகையில், "ருதுராஜ் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் இன்னும் தோனியின் நிழலில் தான் இருக்கிறார். தோனி கேப்டனாக இல்லை என்று எத்தனை முறை வேண்டுமானாலும் பலரும் கூறலாம். ஒருவேளை தோனி அணியை விட்டு வெளியேறினால், அவரது நிழல் இல்லாமல் ருதுராஜ் செயல்படலாம்" என்றார்.
என்னதான் தோனி இருந்தாலும் ருதுராஜ் கெய்க்வாட் பல முடிவுகளை தானே எடுக்கத் துவங்கி இருப்பதை கடந்த சில போட்டிகளில் காண முடிந்தது. எனவே, சித்து கூறுவது போல தோனியின் நிழலில் ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுகிறார் என்றாலும் கூட அதுவே சிஎஸ்கே அணிக்கு பயன் தரும். ருதுராஜ் கெய்க்வாட் அடுத்த ஐபிஎல் தொடரின் போது சிறந்த அனுபவத்துடன் அணியை தனியாக வழிநடத்தும் திறனை பெற்று இருப்பார்.