மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியில் பத்து ஆண்டுகள் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை நீக்கி விட்டு, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்த விவகாரத்தில் பெரும் பனிப் போர் நடந்து வருகிறது. ஆனால், ஒரு வகையில் இது எல்லாவற்றுக்கும் காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான்.
2008 முதல் 2014 வரை ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணி எது என்று கேட்கப்பட்ட போது எல்லோரும் சொன்ன ஒரே பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமே. அந்த அணி முதல் ஏழு ஐபிஎல் தொடர்களில் இரண்டு முறை ஐபிஎல் கோப்பை வென்றது மட்டுமின்றி, ஐந்து முறை ஐபிஎல் இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தது. அந்த காலகட்டத்தில் 2013இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் கோப்பை வென்று இருந்தது. அதுவே அந்த அணியின் முதல் ஐபிஎல் கோப்பை.

அதன் பின் 2015இல் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி கோப்பை வென்றது. அப்போது முதல் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி துவங்கியது. 2016, 2017இல் சிஎஸ்கே அணி தடை செய்யப்பட்ட நிலையில் அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி தனது மூன்றாவது கோப்பையை வென்று சிஎஸ்கே அணியை முந்தியது.
2018இல் சிஎஸ்கே மூன்றாவது கோப்பை வென்று மும்பை அணியின் சாதனையை சமன் செய்தது. அடுத்து 2020 மற்றும் 2021இல் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து இரண்டு ஐபிஎல் கோப்பை வென்று ஐந்து ஐபிஎல் கோப்பை வென்ற ஒரே அணி என்ற பெருமையை பெற்றது. அப்போது சிஎஸ்கே அணி மூன்று முறை மட்டுமே கோப்பை வென்று இருந்தது. அதன் பின் 2021 மற்றும் 2023 இல் சிஎஸ்கே அணி கோப்பைகளை வென்று மும்பை இந்தியன்ஸ் அணியின் ஐந்து ஐபிஎல் கோப்பை வென்ற சாதனையை சமன் செய்தது. 2020க்கு பின் மூன்று ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வெல்லவில்லை.
இனியும் விட்டால் சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸ் அணியை விட கூடுதலாக ஐபிஎல் கோப்பை வென்று விடும். அது நடக்கக் கூடாது என்பதால் மூன்று ஆண்டுகளாக அணியை சரியாக வழிநடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை சொல்லாமல் சொல்லி, ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம்.
ஆனால், புதிதாக கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவும் இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே பெற்றுத் தந்து இருக்கிறார்.