சென்னை : சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டு தோனியை வழிநடத்துவது எளிதான பணியல்ல என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். என்னதான் கேப்டன் பொறுப்பை எடுத்துக் கொண்டாலும், களத்தில் தோனி தான் ஏராளமான ஃபீல்ட் மாற்றங்களை செய்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதனை ருதுராஜ் கெய்க்வாட் நேரடியாக ஒப்புக்கொண்டுள்ளார். இன்னும் பயிற்சியாளர் பிளெமிங், தோனி மற்றும் நான் என்று மூவரும் இணைந்தே முடிவுகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். விராட் கோலி, ரோகித் சர்மா கேப்டன்சிக்கு கீழ் விளையாடிய போது கூட தோனியை அவர்களால் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால் ருதுராஜ் கெய்க்வாட் முழுமையாக தோனியை கட்டுப்படுத்தி முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது சாதாரண விவகாரம் கிடையாது. இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேசுகையில், தோனியை கடவுளாக ரசிகர்கள் பார்க்கிறார்கள். தற்போது கடவுளின் இடத்தை ருதுராஜ் கெய்க்வாட் எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தோனியும் ஓய்வறையில் வீரராகவே இருக்கிறார். நிச்சயம் இது கடினமாக இருக்கும்.
தோனி போன்ற ஒரு வீரரை கேப்டனாக வழிநடத்துவது எளிதல்ல. ஆனால் தோனி தான் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு கேப்டன்சியை விட்டுக் கொடுத்துள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் இன்னும் களத்தில் முழுமையான கட்டுப்பாட்டை எடுக்கவில்லை. அதனை காண்பதற்கு ஆவலாக இருக்கிறேன். அவருக்கு ஒரேயொரு அட்வைஸ் மட்டுமே கொடுக்க விரும்புகிறேன். எவ்வளவு முடியுமோ, அவ்வளவு ரன்களை ருதுராஜ் கெய்க்வாட் விளாச வேண்டும்.
அதனை செய்தாலே, சிஎஸ்கே அணி நல்ல நிலையில் இருக்கும். சிஎஸ்கே அணி தொடர்ந்து வெற்றியை பெற்றால் மட்டுமே ருதுராஜ் கெய்க்வாட் நிச்சயம் நிம்மதியாக இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டன்சியில் இருந்து ஜடேஜா விலகிய போதே, அடுத்த கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்-ஐ நியமிக்க தோனி முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.