சென்னை : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி மிக விரைவாக ஓய்வை அறிவித்ததற்கு அவரின் மனைவி சாக்ஷி போட்ட கண்டிஷனே காரணம் என்று தெரிய வந்துள்ளது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி 2014ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தார். இந்திய அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு இடையில் திடீரென ஓய்வை அறிவித்தார். இன்னும் 10 போட்டிகளில் விளையாடி இருந்தால் கூட 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமை தோனிக்கு கிடைத்திருக்கும்.

இந்த ஓய்வுக்கு காரணம் என்னவென்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் தோனி வெளிப்படையாக எங்கும் பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் தோனியின் மனைவி சாக்ஷி பேசிய வீடியோ ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. அதில், நாம் இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால், ஒரு வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டேன்.
ஏனென்றால் 3 வடிவங்களுக்கும் தோனி கேப்டனாக செயல்பட்டால், குழந்தையுடன் நேரம் செலவிட வாய்ப்பே இல்லாமல் இருக்கும். இதனை தோனிக்கு வெளிப்படையாகவே கூறினேன். அவரும் ஏற்றுக் கொண்டார். அதேபோல் 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் தோனி கேப்டன்சியில் இருந்து விலகப் போகும் தகவல் வெளியாகி கொண்டே இருந்தது.

அதுமட்டுமல்லாமல் தோனியின் ஆசைக்காகவும், கனவுக்காகவும் நான் ஏதோ தியாகம் செய்வதாக பலரும் கூறுகிறார்கள். அப்படியெல்லாம் சொல்ல தேவையில்லை. தோனியின் மீதான அன்பினால் இப்படி செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து அடுத்த ஓராண்டில் அவருக்கு மகள் பிறந்தது.
ஆஸ்திரேலியா மண்ணில் உலகக்கோப்பை தொடரில் விளையாடிய போது தோனிக்கு மகள் பிறந்தார். மகளை பார்க்க கூட வராமல் தோனி நாட்டுக்காக விளையாடினார். அதன்பின் கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு பின் நாடு திரும்பிய தோனி, மகளை பார்த்தார். பின்னர் மகளுக்கு ஸிவா என்று பெயர் சூட்டிய தோனி, அவரை சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகளுக்கு அழைத்து வருவதை வழக்கமாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.