மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஒரே ஓவரில் 15 ரன்கள் குவித்தார் சிவம் துபே. இதன் மூலம் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கினார்.
அது மட்டுமின்றி இந்திய டி20 அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கு போட்டியாக கருதப்படுகிறார் சிவம் துபே. சிஎஸ்கே அணிக்காக சிவம் துபே பந்து வீசாவிட்டாலும் அவர் வேகப் பந்துவீச்சாளர் ஆவார். அந்த வகையில் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சை சிதற வைத்து இந்திய அணியில் அவரது இடத்துக்கு அழுத்தம் கொடுத்தார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் துவக்க வீரர்கள் ரஹானே 5, ரச்சின் 21 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் ருதுராஜ், சிவம் துபே இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினர். சிவம் துபே சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் எளிதாக சிக்ஸ் அடிப்பார் என்பதால் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சுழற் பந்துவீச்சாளர்களுக்கு ஓவர் கொடுக்காமல், அதை ஈடுகட்ட தானே பந்து வீசினார்.
ஆனால், அவர் வீசிய முதல் ஓவரிலேயே சிவம் துவே மூன்று ஃபோர் அடித்து 15 ரன்கள் குவித்து அவருக்கு அழுத்தம் கொடுத்தார். அதன் பின்னும் விடாமல் பந்து வீசிய ஹர்திக் பாண்டியா, ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை வீழ்த்தினார். அந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதே நம்பிக்கையில் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் டேரில் மிட்செல் விக்கெட்டை வீழ்த்திய போதும் தோனி அடித்த ஹாட்ரிக் சிக்ஸரால் 26 ரன்களை வாரிக் கொடுத்தார் பாண்டியா. 3 ஓவர்கள் வீசிய பாண்டியா 2 விக்கெட்கள் எடுத்து 43 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தார்.
அதே சமயம், சிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். சிவம் துபேவின் பலவீனமாக சொல்லப்பட்ட வேகப் பந்துவீச்சை மட்டுமே பயன்படுத்தி இருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனாலும் அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 173 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்தார். மறுபுறம் பேட்டிங்கிலும் சொதப்பி இருந்தார் ஹர்திக் பாண்டியா. மும்பை அணியின் சேஸிங்கில் 6 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். அந்த வகையில் சிவம் துபேவின் கை ஓங்கி இருக்கிறது.