சென்னை : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர இளம் வீரர் பதிரானா காயம் காரணமாக களமிறங்காதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரண் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதனால் வழக்கம் போல் சிஎஸ்கே அணி முதல் பேட்டிங்கை விளையாடுகிறது. இந்த போட்டியில் காயம் காரணமாக நட்சத்திர வீரர்களான பதிரானா மற்றும் துஷார் தேஷ்பாண்டே இருவரும் விலகியுள்ளனர்.

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போதே நட்சத்திர வீரர் பதிரானா காயமடைந்தார். வெறும் 2 ஓவர்கள் மட்டுமே வீசிய பதிரானா, பிசியோதெரபிஸ்ட் உடன் ஓய்வறை நோக்கி நடந்து சென்றார். இதனால் துஷார் தேஷ்பாண்டே, ஷர்துல் தாக்கூர் மற்றும் முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஆகியோர் தான் டெத் ஓவர்களை வீசினார்கள்.
ஐபிஎல் தொடருக்கு முன்பாகவும் பதிரானா காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தாமதமாகவே சிஎஸ்கே அணியுடன் பதிரானா இணைந்தார். அதன்பின் பதிரானா தொடர்ச்சியாக விளையாடி வந்த சூழலில், மீண்டும் காயமடைந்துள்ளார். இதுகுறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் பேசுகையில், தடைபிடிப்பு காரணமாக பதிரானா இந்த போட்டியில் களமிறங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த சீசனில் சிஎஸ்கே அணி எப்போதெல்லாம் சிக்கலில் சிக்குகிறதோ, அப்போது பந்தை பதிரானாவிடம் தான் ருதுராஜ் கொடுத்து வந்தார். இதனால் 6 போட்டிகளில் விளையாடிய பதிரானா மொத்தமாக 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் பதிரானாவின் இடத்தை சிஎஸ்கே அணி எப்படி நிரப்ப போகிறது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.