சென்னை : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்த நிலையில், மேட்ச் ஃபிக்சிங் நடந்ததாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டால் 2 ஆண்டுகள் சிஎச்கே அணிக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் 2016ஆம் ஆண்டுக்கு முன்பாகவே 2012ஆம் ஆண்டு முதலே சிஎஸ்கே அணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. குறிப்பாக 2012ஆம் ஆண்டு கேகேஆர் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணியின் ஆட்டம் ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் 2018ஆம் ஆண்டுக்கு பின் சிஎஸ்கே அணி மீது பெரியளவில் எழவில்லை. இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மேட்ச் ஃபிக்சிங் செய்யப்பட்டதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த போட்டியில் முதல் பேட்டிங்கை ஆடிய சிஎஸ்கே அணி, மொத்தமாக பேட்டிங் வரிசையையே மாற்றியது.
ரஹானே ஆட்டமிழந்த பின் டேரல் மிட்சல் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென சிவம் துபே களமிறக்கப்பட்டார். இதற்கு ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தான் மிட்சல் ஃபார்முக்கு வந்திருந்தார். தொடர்ந்து ஸ்பின்னர்களை பொளக்கும் சிவம் துபே டக் அவுட்டானதே சந்தேகத்திற்குள்ளாகி உள்ள நிலையில், அதன்பின் ஜடேஜா வந்தது மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கிறது.
ஏனென்றால் நம்பர் 4 வரிசையில் ஜடேஜா களமிறங்கி இதுவரை பெரிதாக எந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை. தொடர்ந்து ஜடேஜா ஆட்டமிழந்த சூழலிலும் டேரல் மிட்சலை களமிறக்காமல், இம்பேக்ட் பிளேயராக சமீர் ரிஸ்வி வந்தார். ஏற்கனவே மிட்சல், தோனி, மொயின் அலி ஆகிய 3 பேட்ஸ்மேன்கள் இருக்கும் சூழலில், இம்பேக்ட் பிளேயரை பயன்படுத்த வேண்டிய தேவையே கிடையாது.
அதேபோல் ஸ்பின்னர்களை வெளுக்க கூடிய சமீர் ரிஸ்வி, ஒரு சிக்ஸ் கூட அடிக்காமல் 23 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். பேட்டிங் ஆர்டரிலேயே இவ்வளவு சொதப்பல்களை சிஎஸ்கே அணி வரலாற்றிலேயே நடந்ததில்லை. பேட்டிங்கை தொடர்ந்து பவுலிங்கிலும் மேட்ச் ஃபிக்சிங் நடந்ததற்கான வலுவான குற்றச்சாட்டுகள் உள்ளது.
2 பந்துகளில் வீசிய நிலையில் தீபக் சஹர் காயம் காரணமாக ஓய்வறைக்கு சென்றார். இதுவரை தீபக் சஹர் நிலை குறித்து சிஎஸ்கே அணி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதேபோல் பதிரானா, துஷார் தேஷ்பாண்டே இருவரும் ஒரே போட்டியில் பெஞ்ச் செய்யப்பட்டதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
முன்னணி பவுலர்கள் 3 பேர் ஒரே போட்டியில் பெஞ்சில் இருந்தது சிஎஸ்கே ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் ஷஷாங்க் சிங் கொடுத்த கேட்சை லாங் ஆன் திசையில் நின்றிருந்த ருதுராஜ் கெய்க்வாட் எளிதாக பிடித்திருக்க முடியும். ஆனால் மிட் ஆனில் நின்றிருந்த டேரல் மிட்சல் பிடிக்கட்டும் என்று ருதுராஜ் கெய்க்வாட் காத்திருந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிஎஸ்கே - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மேட்ச் ஃபிக்சிங் நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளது என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.