சென்னை : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் சிவம் துபே டக் அவுட்டானது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரண் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் சிஎஸ்கே அணி தரப்பில் ரஹானே - ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ரபாடா வீசிய முதல் ஓவரில் இருவரும் நிதானம் காட்டிய நிலையில், அர்ஷ்தீப் சிங் பவுலிங்கில் ருதுராஜ் அதிரடியாக 2 பவுண்டரிகளை விளாசினார்.

5 ஓவர்களில் சிஎஸ்கே அணி 37 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில், சாம் கரண் வீசிய 6வது ஓவரில் ரஹானே அதிரடியாக ஹாட்ரிக் பவுண்டரியை விளாசினார். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் சேர்த்திருந்தது. முதல்முறையாக இந்த சீசனில் பவர் பிளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட் கொடுக்காமல் இருந்தது.
இதன்பின் ஸ்பின்னர்கள் அட்டாக்கில் வர, ஹர்ப்ரீத் பராரை அட்டாக் செய்ய முயன்று ரஹானே 24 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் டேரல் மிட்சல் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென சிவம் துபேவை சிஎஸ்கே அணி களமிறக்கியது. ஸ்பின்னர்களை அட்டாக் செய்வார் என்பதால் சிவம் துபே களமிறக்கப்பட்டதாக பார்க்கப்பட்டது.
ஆனால் சிவம் துபே முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால் சேப்பாக்கம் மைதானமே மொத்தமாக மயான அமைதிக்கு சென்றது. வழக்கமாக நம்பர் 4 பேட்டிங் வரிசையில் தான் சிவம் துபே களமிறக்கப்படுவார். 10 ஓவர்களுக்கு பின் ஸ்பின்னர்கள் வரும் போது அட்டாக்கிங் கிரிக்கெட்டை வெளிப்படுத்துவார். ஆனால் இன்று 8வது ஓவரிலேயே சிவம் துபே களமிறங்கி ஆட்டமிழந்தது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பதிரானா மற்றும் துஷார் தேஷ்பாண்டே இருவரும் இல்லாததால் 220 ரன்களை சிஎஸ்கே அணி குவிக்க வேண்டும் என்று பார்க்கப்பட்டது. இதனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் அவசரப்பட்டு சிவம் துபே 8வது ஓவரிலேயே களமிறக்கியது பின் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.