சென்னை : 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட போது சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகனாக இருந்ததாக டெல்லி வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்வதற்காக 7 அணிகள் போட்டி போட்டு வருகின்றன. குறிப்பாக டெல்லி அணி அடுத்த 3 போட்டிகளில் வெற்றிபெறும் பட்சத்தில், பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும். அதற்கு குல்தீப் யாதவின் பவுலிங் முக்கியமானதாக அமைந்துள்ளது.

இந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள குல்தீப் யாதவ் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்த நிலையில் அஸ்வினின் யூ-ட்யூப் சேனலில் அளித்துள்ள பேட்டியில், ஐபிஎல் தொடரின் முதல் சீசன் நடக்கும் போது உத்தரப் பிரதேச அணிக்காக யு15 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி கொண்டு இருந்தேன். அப்போது இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்ற லட்சியம் எல்லாம் எனக்கு இல்லை.
யு19 இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே ஒரே நோக்கம். ஆனால் உலகக்கோப்பை தொடரில் விளையாட முடியவில்லை. அந்த நேரத்தில் சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகனாக இருந்தேன். ஏனென்று தெரியாது.. தோனி, ஹெய்டன் உள்ளிட்ட வீரர்களால் சிஎஸ்கே அணி பிடித்தது. அதன்பின் யு19 அணிக்காக ஒருமுறை மும்பை அணியை எதிர்த்து விளையாடினேன்.
அந்த போட்டியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு, 75 ரன்களையும் விளாசினேன். அப்போது மும்பை அணியின் ராகுல் சாங்வி என்னிடம் வந்து பேசினார். அதன்பின் உடனடியாக என்னை ட்ரையல்ஸ் அழைத்து சென்றனர். அங்கு ஷான் பொல்லாக், பரஸ் ஆம்ரே, ராகுல் சாங்வி உள்ளிட்டோர் இருந்தனர். எனது பவுலிங்கை சில மணி நேரம் பார்த்த அவர்கள், உடனடியாக ஒப்பந்தம் செய்தனர்.
அந்த சீசனில் மும்பை அணிக்காக என்னால் முழுமையாக பங்கேற்க முடியவில்லை. இந்திய யு19 அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றதால், தாமதமாகவே மும்பை அணியுடன் இணைந்தேன். அதன்பின் மும்பை அணியில் இணைந்த முதல் நாளிலேயே சச்சின் டெண்டுல்கருக்கு பவுலிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது.
சச்சின் பயிற்சி செய்து கொண்டிருப்பதாக தான் என்னை பயிற்சிக்கு அழைத்தனர். அப்போது சில நிமிடங்கள் அவருக்கு பந்துவீசி, ஒருமுறை அவுட்டாக்கினேன். எல்லோரும் என்னை பாராட்டினார்கள். ஆனால் மும்பை அணிக்காக களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏனென்றால் ரோகித் சர்மா, ஹர்பஜன் சிங் என்று ஏராளமான ஜாம்பவான்கள் இருந்தனர். சிஎஸ்கே ரசிகனான என்னை மும்பை அணி வாங்கியது இப்படித்தான் என்று தெரிவித்துள்ளார்.