முல்லன்பூர் : எனது வீட்டில் தந்தை எப்படி என்னை கவனித்து கொள்வாரோ, அப்படிதான் கிரிக்கெட் களத்தில் தோனி என்னை பார்த்து கொள்கிறார் என்று சிஎஸ்கே இளம் வீரர் பதிரானா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 5 வெற்றி, 5 தோல்வி உட்பட 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் பதிரானா மற்றும் தீக்சனா இருவரும் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்காக அமெரிக்கா விசா தொடர்பாக இலங்கை புறப்பட்டனர்.

இதனால் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இருவரும் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் இலங்கையில் இருந்து இருவரும் தரம்சாலா புறப்பட்டுள்ளனர். இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர பவுலராக பதிரானா அசத்தி வருகிறார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய பதிரானா, மொத்தமாக 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ள வீடியோவில் பதிரானா பேசுகையில், எனது கிரிக்கெட் வாழ்க்கையின் தந்தை தோனி தான். எப்போதும் எந்த நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்று தோனி கொடுக்கும் அட்வைஸ் விலை மதிப்பில்லாதது. கிட்டத்தட்ட வீட்டில் இருக்கும் போது என் தந்தை என்னை எப்படி கவனித்து கொள்வாரோ, அதேபோல் தோனி என்னை கவனித்து கொள்கிறார்.
நான் களத்தில் இருக்கும் போது பெரியளவில் எந்த அறிவுரையும் கூற மாட்டார். ஆனால் களத்திற்கு வெளியே தோனி கூறும் சிறிய விஷயமும் மிகப்பெரிய வித்தியாசத்தை எனக்கு உணர்த்துகிறது. அது என் மன உறுதியையும் அதிகரிக்கிறது என்று தெரிவித்துள்ளார். சுரேஷ் ரெய்னா, ஆர்பி சிங், அஸ்வின் உள்ளிட்ட வீரர்களுடன் தோனி களத்தில் நெருங்கிய நட்பில் இருந்துள்ளார்.
ஆனால் அவர்களுக்கு பின் தோனி, பதிரானாவுக்கு தான் அதிக இடத்தை அவரது வாழ்க்கையில் கொடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணியில் இடம்பிடித்ததில் இருந்து பதிரானாவை எந்த குறையும் இல்லாமல் தோனி பாதுகாத்து வருகிறார். அதற்கேற்றபடி மும்பை அணி அழைத்த போதும், பதிரானா தனது விஸ்வாசத்தை தோனிக்கும், சிஎஸ்கே அணிக்கும் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.