சென்னை : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸில் தோல்வியடைந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரண் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ருதுராஜ் கெய்க்வாட், 9வது முறையாக டாஸில் தோல்வியடைந்துள்ளார். இதுவரை கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே டாஸில் வென்றுள்ளார்.

இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்யவுள்ளது. டாஸின் போது பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரண் பேசுகையில், முதலில் பவுலிங் செய்ய விரும்புகிறோம். பிட்ச் நன்றாக உள்ளது. கடந்த போட்டியில் அடைந்த வெற்றிக்கு பின் நாங்கள் ஆவலாக உள்ளோம். சேப்பாக்கம் மைதானத்தின் ரசிகர்கள் எப்போதும் அற்புதமானவர்கள். நன்றாக தொடங்கி, பவர் பிளே ஓவர்களிலேயே விக்கெட் வீழ்த்த வேண்டும். கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்குகிறோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், நாங்களும் பவுலிங் செய்யவே விரும்பினோம். இந்த மைதானத்தில் ஈரப்பதம் இருக்கும் போது டிஃபெண்டிங் செய்வது எளிதல்ல. ஆனால் கடந்த போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறது. இந்த போட்டியில் பதிரானா மற்றும் துஷார் தேஷ்பாண்டே இருவரும் விளையாடவில்லை.
அதனால் நாங்கள் நல்ல ஸ்கோரை இலக்காக நிர்ணயம் செய்ய வேண்டும். ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. காயம் காரணமாக பதிரானா களமிறங்கவில்லை. தேஷ்பாண்டேவுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் ஷர்துல் தாக்கூர் மற்றும் ரிச்சர்ட் கிளீசன் இருவரும் களமிறங்குவதாக தெரிவித்துள்ளார். இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.