சென்னை : ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடவுள்ள அடுத்த 4 போட்டிகளில் 3 போட்டிகள் வெளி மைதானங்களில் விளையாடவுள்ளது பிளே ஆஃப் வாய்ப்பிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் 10 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற சிஎஸ்கே அணி அடுத்த 4 போட்டிகளில் 3ல் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணி அடுத்த 4 போட்டிகளில் பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஆர்சிபி ஆகிய அணிகளை எதிர்த்து விளையாடவுள்ளது. இதில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளது. மற்ற மூன்று போட்டிகளையும் தரம்சாலா, அகமதாபாத் மற்றும் பெங்களூரு மைதானங்களில் சிஎஸ்கே அணி விளையாடுகிறது.
இந்த சீசனை பொறுத்தவரை சிஎஸ்கே அணி சொந்த மண்ணில் விளையாடிய 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அதேபோல் வெளி மைதானங்களில் விளையாடிய 4 போட்டிகளில் 3ல் தோல்வியடைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியின் முக்கிய பவுலரான முஸ்தஃபிசுர் ரஹ்மான் நாடு திரும்பிவிட்டார்.
அதேபோல் துஷார் தேஷ்பாண்டே காய்ச்சலால் அவதியடைந்து வரும் நிலையில், தீபக் சஹர் மீண்டும் காயம் என்று ஓய்வில் இருக்கிறார். அதேபோல் நட்சத்திர பவுலர்களான பதிரானா மற்றும் தீக்சனா இருவரும் அமெரிக்கா விசா காரணமாக இலங்கை புறப்பட்டுள்ளனர். தரம்சாலா மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச் என்பதால், அங்கு சிஎஸ்கே அணி வெல்வது எளிதாக இருக்காது.
கடந்த சீசனிலேயே ராஜஸ்தான் அணி சேப்பாக்கத்தில் வைத்தே சிஎஸ்கே அணியை வீழ்த்தி காட்டியது. அகமதாபாத் மற்றும் பெங்களூரு மைதானங்கள் எந்த நேரத்தில் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாது. இதனால் சிஎஸ்கே அணியை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்து செல்வதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சோதனைகளை அவர் எப்படி சமாளிப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.