முல்லன்பூர் : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் செயல்பாடுகளில் திருப்தியில்லை என்று அந்த அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒருமுறை கூட கோப்பை வெல்லாத அணிகளில் பஞ்சாப் அணியும் ஒன்று. சீசனுக்கு ஒரு கேப்டன், சீசனுக்கு ஒரு பயிற்சியாளர் என்று மாற்றி வந்த பெருமை பஞ்சாப் அணிக்கு மட்டுமே உண்டு. ஆனால் கடந்த 2 சீசன்களாக பஞ்சாப் அணியின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வந்தது.

ஏனென்றால் மும்பை, சென்னை போன்ற அணிகளையே அதன் சொந்த மண்ணில் பஞ்சாப் அணி வீழ்த்தியது. இந்த நிலையில் நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 4 வெற்றி, 7 தோல்வி என்று 8 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. கேப்டன் ஷிகர் தவான் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால், சாம் கரண் கேப்டன்சி பணியை மேற்கொண்டு வந்தார்.
இதனால் சொந்த மண்ணில் பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்தாலும், சென்னை, கொல்கத்தா, குஜராத் உள்ளிட்ட அணிகளை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. இருப்பினும் பஞ்சாப் அணி அடுத்து விளையாடவுள்ள 3 போட்டிகளில் 3லும் வென்றால், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் பஞ்சாப் அணி விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் அதன் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா ஆதரவளித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பஞ்சாப் அணியின் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் அணியின் செயல்பாடுகள் குறித்து அந்த அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா பேசுகையில், பஞ்சாப் அணியின் செயல்பாடுகளில் நிச்சயம் திருப்தியோ, மகிழ்ச்சியோ இல்லை.
கடைசி பந்தில் மட்டும் 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளோம். அதேபோல் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் காயத்தில் இருக்கிறார். சில போட்டிகளில் மிகச் சிறந்த ஆட்டத்தையும், சில போட்டிகளில் எதிர்பார்த்த ஆட்டத்தையும் வீரர்கள் வெளிப்படுத்தவில்லை. வரும் காலங்களில் சொந்த மண்ணில் நடக்கும் போட்டிகளை வென்றால் மட்டுமே சிறந்த சீசனாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.