சென்னை : ஐபிஎல் தொடர் வரலாற்றில் சிஎஸ்கே கேப்டனாக 500 ரன்களை விளாசிய முதல் வீரர் என்ற புதிய சாதனை ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. மொத்தமாக 15 சீசன்களில் சிஎஸ்கே அணிக்காக 3 வீரர்கள் கேப்டன்சி பணியை மேற்கொண்டுள்ளனர். அதில் பெரும்பான்மை போட்டிகளுக்கு எம்எஸ் தோனியும், சில போட்டிகளுக்கு சுரேஷ் ரெய்னாவும், 2022ஆம் ஆண்டு பாதி சீசன் வரை ஜடேஜாவும் கேப்டன் பதவியில் இருந்தனர்.

இவர்களில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக முழுமையாக ஒரு சீசனில் விளையாடி ஒரு முறை கூட 500 ரன்களை விளாசியதில்லை. அதிகபட்சமாக தோனி 2013 சீசனில் 461 ரன்களையும், 2018 சீசனில் 455 ரன்களையும், 2008 சீசனில் 414 ரன்களையும் விளாசி இருக்கிறார். பெரும்பாலும் நம்பர் 5 அல்லது நம்பர் 6ல் களமிறங்கி வந்ததால், தோனி ஒருமுறை கூட 500 ரன்களை விளாசியதில்லை.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்பேற்றுள்ளார். இந்த சீசனில் அசத்தலாக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் இதுவரை ஒரு சதம், 4 அரைசதம் உட்பட 509 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் மூலமாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக 500 ரன்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
கேப்டன்சி பொறுப்பேற்ற போதும் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கேப்டன்சி பொறுப்பேற்ற பின் கூடுதல் கவனத்துடன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் செய்து வருகிறார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் ருதுராஜ் கெய்க்வாட்-ஐ கொண்டாடி வருகின்றனர். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 48 பந்துகளில் 2 சிக்ஸ், 5 ஃபோர்ஸ் உட்பட 62 ரன்களை விளாசி இருக்கிறார்.
சிஎஸ்கே அணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்க்க திணறி வந்த சூழலில், தனியாளாக நின்று அணியை காப்பாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசி ஆரஞ்ச் கேப்பை வைத்திருந்த விராட் கோலியிடம் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யாத பிசிசிஐ-க்கு ருதுராஜ் கெய்க்வாட் பதிலடி கொடுத்துள்ளார்.