சென்னை : சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சிவம் துபே நல்ல பேட்டிங் ஃபார்மில் இருப்பதாக பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் நட்சத்திரமாக சிவம் துபே மாறி இருக்கிறார். கடந்த சில சீசன்களில் ஸ்பின்னர்களை மட்டுமே பொளந்து கட்டிய சிவம் துபே, இந்த சீசனில் வேகப்பந்துவீச்சாளர்களையும் வெளுத்து வாங்கி வருகிறார். இந்தியாவில் முதல் பந்தில் இருந்தே சிக்ஸ் அடிக்கும் எண்ணத்துடன் கிடைக்கக் கூடிய பேட்ஸ்மேன்கள் அரிதானது.

சிஎஸ்கே அணி அந்த வகையில் சிவம் துபே சிறப்பாக பட்டைத் தீட்டி வைத்துள்ளது. இருப்பினும் பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த 2 போட்டிகளில் சிவம் துபே டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் பலமிழந்து இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் சிவம் துபேவின் பேட்டிங் ஃபார்மும் குறைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் சிவம் துபே குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர்களில் ஒருவரான எரிக் சிம்மன்ஸ் பேசுகையில், எங்கள் அணியின் மிடில் ஆர்டர் குறித்து பெரிதாக கவலை கொள்ளவில்லை. ஏனென்றால் தரமான வீரர்கள் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். அவர்கள் இதுவரை பெரியளவில் விளையாடவில்லை என்றாலும், வரும் போட்டிகளில் அசத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல் சிவம் துபேவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
சில நேரங்களில் ஷாட்கள் விளையாடும் போது இப்படி நடப்பது சாதாரண விஷயம் தான். இதுவரை அசத்தலாக ஆடி வந்த சிவம் துபே, 2 போட்டிகளில் டக் அவுட்டாகி இருக்கிறார். இருந்தாலும் மிடில் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஸ்கோரை கொண்டு வந்தனர். இந்த சீசன் தொடக்கத்தில் இருந்தே எங்களின் வீரர்கள் சில காயத்தில் இருந்தனர். அதேபோல் பிளேயிங் 12ல் இடம்பெறாத சில சிறந்த வீரர்கள் பெஞ்சில் இருந்தார்கள்.
அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றி கொண்டே இருந்தோம். அப்படிதான் சிமர்ஜித் சிங் களமிறங்கி அசத்தி இருக்கிறார். முதல் போட்டியிலேயே சிறப்பாக பவுலிங் செய்து விக்கெட்டுகளை வீழ்த்தியது நிச்சயம் மேஜிக் தான். இதேபோல் சிஎஸ்கே அணியின் மற்ற வீரர்களும் தயாராக இருக்கின்றனர். அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.