சென்னை : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததற்கு மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதே காரணம் என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 62 ரன்களை விளாசினார். இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களை சேர்த்து வெற்றிபெற்றது.

இதன் மூலம் சிஎஸ்கே அணி 5வது தோல்வியை பதிவு செய்துள்ளது. சொந்த மண்ணில் மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளதால், சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், என்னை பொறுத்தவரை 50 முதல் 60 ரன்கள் வரை குறைவாக எடுத்துள்ளோம். நாங்கள் பேட்டிங் செய்யும் போது பிட்சில் எந்த உதவியும் பேட்ஸ்மேன்களுக்கு கிடைக்கவில்லை.
இம்பேக்ட் பிளேயர் விதியை பயன்படுத்தியும் எதிர்பார்த்த இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை. பயிற்சியின் போது டாஸ் வெல்வதற்கும் சில பயிற்சிகளை எடுத்து கொள்கிறேன். அப்போது என்னால் வெல்ல முடிந்தாலும், போட்டியின் போது வெல்ல முடியவில்லை. அதனை டாஸ் வெல்ல என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. நான் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது கூட இவ்வளவு அழுத்தம் இருந்ததில்லை.
டாஸின் போது அதிக அழுத்தம் ஏற்படுகிறது. கடந்த போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற போது, நாங்களும் கொஞ்சம் ஆச்சரியமடைந்தோம். கடந்த 2 போட்டிகளிலும் பிட்ச் மற்றும் சூழல் நன்றாக இருந்தது என்று நினைக்கிறேன். இந்த பிட்சில் 200 ரன்களை குறைந்தபட்சம் சேர்த்திருக்க வேண்டும். 180 ரன்கள் என்பது கூட போதுமானதாக இருந்திருக்காது.
அதேபோல் முக்கியமான வீரர்கள் ஒரே போட்டியின் போது காயமடைவது நிச்சயம் சிக்கலை ஏற்படுத்தியது. போட்டியின் போது சில நேரங்களில் விக்கெட் வீழ்த்த வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் 2 பவுலர்கள் தான் இருந்தனர். பனிப்பொழிவு வந்த போதே, ஸ்பின்னர்களை முழுமையாக பயன்படுத்த முடியாது என்று தெரிந்துவிட்டது. இன்னும் 4 போட்டிகள் மீதமுள்ளது. அதனை வெல்ல முயற்சிப்போம் என்று தெரிவித்துள்ளார்.