தரம்சாலா : ஐபிஎல் தொடரில் 10 முறை டாஸில் தோல்வியடைந்தாலும், 6 போட்டிகளில் வென்று சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது கேப்டன்சி திறமையை நிரூபித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இதன் மூலம் அடுத்த 3 போட்டிகளில் 2 போட்டியில் வென்றாலே, சிஎஸ்கே அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்று பார்க்கப்படுகிறது. அடுத்த போட்டியில் சிஎஸ்கே அணி குஜராத் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

இதனிடையே இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்பேற்றார். இதனால் கேப்டன்சியில் ருதுராஜ் கெய்க்வாட் ஜொலிப்பாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. அதற்கேற்ப வெற்றியும், தோல்வியும் சிஎஸ்கே அணி மாறி மாறி பெற்று வந்தது. அதுமட்டுமல்லாமல் ருதுராஜ் கெய்க்வாட் டாஸில் 11 போட்டிகளில் 10 முறை தோல்வியடைந்துள்ளார்.
இதனால் சிஎஸ்கே ரசிகர்களே ராசியில்லாத கேப்டன் என்று ருதுராஜ் கெய்க்வாட் மீது முத்திரை குத்தினார். இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸில் தோல்வியடைந்தாலும், கேப்டனாக அசத்தியுள்ளார் ருதுராஜ். முதல் ஓவரிலேயே சான்ட்னரை கொண்டு வந்து அட்டாக் செய்ததாகட்டும், பவர் பிளே ஓவர்கள் முடிவடைந்த பின் உடனடியாக ஜடேஜாவை வைத்து திட்டமிட்டது என்று அசத்தி இருக்கிறார்.
இந்திய பிட்சை பொறுத்தவரை ஸ்பின்னர்களை சிறப்பாக பயன்படுத்தும் வல்லமை கொண்டவர்களே நல்ல கேப்டனாக வர முடியும். அதனை ருதுராஜ் கெய்க்வாட் புரிந்து கொண்டிருப்பது சிஎஸ்கே ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரின் வெற்றி, தோல்விகளில் டாஸ் முக்கியப் பங்கு வகித்து வருகிறது.
10 முறை டாஸில் தோல்வியடைந்த போதும், 6 போட்டிகளில் சிஎஸ்கே அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றுள்ளார் ருதுராஜ். அதேபோல் சுப்மன் கில் போல் அல்லாமல் கேப்டனாக பொறுப்பேற்றாலும் பேட்டிங்கில் சிஎஸ்கே அணியின் தூண் போல் நின்று ஒவ்வொரு போட்டியிலும் அசத்தி வருகிறார். இதன் மூலம் தோனிக்கு பின் சிஎஸ்கே அணியின் கேப்டன்சியை மேற்கொள்ள ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக தயாராகியுள்ளதாக பார்க்கப்படுகிறது.