பெங்களூர் : ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியில் மொயின் அலிக்கு பதிலாக மற்றொரு ஆல்ரவுண்டருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மே 18ஆம் தேதி பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் ஆர்சிபி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வென்றால், சிஎஸ்கெ அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். அதேபோல் சிஎஸ்கே அணியை ஆர்சிபி அணி 11 பந்துகள் மீதமிருந்த நிலையில் வென்றாலோ அல்லது 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ பெங்களூர் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும்.

இதனால் இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா என்ற நிலையில் மே 18ஆம் தேதி ஆட்டம் நடக்கவுள்ளது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து அணி வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அழைத்துள்ளது. இதன் காரணமாக ஆர்சிபி அணியில் உள்ள இங்கிலாந்து அணியின் வில் ஜாக்ஸ், ரீஸ் டாப்லீ ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர்.
அதேபோல் சிஎஸ்கே அணியில் இருக்கும் மொயின் அலியும் நாளை நாடு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிஎஸ்கே அணியின் காம்பினேஷன் தற்போது செட்டாகியுள்ள நிலையில், மொயின் அலி நாடு திரும்புவது சிக்கலை ஏற்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் நம்பர் 4 பேட்ஸ்மேனாக யார் களமிறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் மொயின் அலி-க்கு பதிலாக மிட்சல் சான்ட்னர் சேர்க்கப்படலாம் என்று கணிக்கப்படுகிறது. ஏனென்றால் பெங்களூரு மைதானத்தில் ஸ்பின்னர்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதால், தீக்சனா மற்றும் சான்ட்னர் இருவரையும் சிஎஸ்கே அணி களமிறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொயின் அலி அளவிற்கு இல்லையென்றாலும், சிக்சர் அடிக்கும் திறமை சான்ட்னர்-க்கு இருப்பதால், சிஎஸ்கே பிளேயிங் லெவனில் இருப்பார் என்று சிஎஸ்கே ரசிகர்களும் விவாதித்து வருகின்றனர். ஆனால் சான்ட்னரை இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்திவிட்டு, பேட்ஸ்மேனாக ஆரவல்லி அவினாஷை பயன்படுத்தவும் வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.