மும்பை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்பாகவே புறப்பட்ட இங்கிலாந்து வீரர்களை இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் கடுமையாக சாடியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 2 வாரங்களே உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் கண்டிப்பாக வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டன. இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த வீரர்களும் நாடு திரும்பிவிட்டனர்.

ராஜஸ்தான் அணிக்காக ஆடிய பட்லர், பஞ்சாப் அணிக்காக ஆடிய சாம் கரண், லிவிங்ஸ்டன், வோக்ஸ், சிஎஸ்கே அணிக்காக ஆடி வந்த மொயின் அலி, ஆர்சிபி அணிக்காக ஆடி வந்த வில் ஜாக்ஸ், கேகேஆர் அணிக்காக ஆடிய பில் சால்ட் உள்ளிட்ட பலரும் நாடு திரும்பியுள்ளனர். இதனால் ஐபிஎல் தொடரில் ஆடி வரும் பல்வேறு அணிகளும் சிக்கலை சந்தித்து வருகின்றன.
ஏனென்றால் லீக் போட்டிகள் முடிவடைய உள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடக்கவுள்ளது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் ஆடிய இடத்தை நிரப்ப முடியாமல் அணி நிர்வாகங்கள் திணறி வருகின்றன. குறிப்பாக ராஜஸ்தான் அணியில் பட்லர் மற்றும் கேகேஆர் அணியில் சால்ட் இருவரும் அந்தந்த அணிகளுக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இவர்களின் இங்கிலாந்து சென்றதால், என்ன செய்வதென புரியாமல் இரு அணிகளும் புலம்பி வருகின்றனர். இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில், ஐபிஎல் தொடரில் மொத்த சீசனிலும் விளையாட வேண்டும் அல்லது பங்கேற்காமல் இருக்க வேண்டும் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே சுனில் கவாஸ்கர், ஐபிஎல் தொடரை விடவும் நாட்டுக்காக விளையாடுவதை முன்னிலைப்படுத்தும் வீரர்களின் முடிவை மதிக்கிறேன். ஆனால் ஐபிஎல் தொடரில் இருந்து பாதியில் விலகும் போது, அது அணிகளை பாதிப்படைய செய்கிறது. வீரர்கள் பெறும் சம்பளத்தை குறைக்க ஐபிஎல் அணிகளுக்கு உரிமை கிடையாது. அதேபோல் வீரர்களின் சம்பளத்தில் இருந்து 10 சதவிகிதம் கமிஷனாக அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் பெறுகின்றன என்று விமர்சித்துள்ளார்.