சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியது குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. முதலில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனை ஐபிஎல் தொடரின் முதல் போட்டியின் டாஸ் நிகழ்வின் போது அறிமுகம் செய்யலாம் என தோனி நினைத்ததாகவும், எனினும் அது தவறாக போய் விடும் வாய்ப்பு இருந்ததால் ஒருநாள் முன்கூட்டியே அடுத்த கேப்டன் குறித்து அறிவித்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாகவே சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார்? என்ற கேள்வி விவாதிக்கப்பட்டு வந்தது. தோனி 2019இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் அடுத்த ஆண்டில் அவர் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவார் என கூறப்பட்டது.

எனினும், சிஎஸ்கே அணியில் தோனி என்ற பெரிய பிம்பத்துக்கு பின் அணியை தூக்கிப் பிடிக்க சரியான வீரர் தேவைப்பட்டார். 2022இல் ஜடேஜாவை கேப்டனாக்கிப் பார்த்தும் அது சரியாக அமையவில்லை. இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டை இரண்டு ஆண்டுகளாக தயார் செய்த தோனி அவரை 2024 ஐபிஎல் தொடரின் போது கேப்டனாக்க முடிவு செய்தார்.
தோனி இதற்கு முன் கேப்டன் பதவி விலகுவது மற்றும் ஓய்வு அறிவிப்புகளை மிக ரகசியமாக வைத்திருந்து கடைசி நிமிடத்தில் தான் அறிவிப்பார். அதே போல, 2024 ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் போட வரும் போது ருதுராஜ் கெய்க்வாட்டை அனுப்பி அவர்தான் கேப்டன் என அறிவிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால், முதல் ஐபிஎல் போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக நேற்று அனைத்து ஐபிஎல் கேப்டன்கள் சந்தித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடந்தது. அந்த நிகழ்வில் தோனி பங்கேற்று விட்டு அடுத்த நாள் ருதுராஜ் கெய்க்வாட் தான் சிஎஸ்கே அணியின் கேப்டன் என அறிவித்தால் அது தவறாக இருக்கும் என்பதால் அந்த நிகழ்வுக்கு சில மணி நேரம் முன்னதாக சிஎஸ்கே கேப்டன் மாற்றம் குறித்த தகவலை வெளியிட்டது.