சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான் இடம் பெற்ற முதல் போட்டியிலேயே 10 பந்துகளில் 4 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார் வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மான்.
அது மட்டுமின்றி ஐபிஎல் வரலாற்றில் வங்கதேச வீரரின் மிகச் சிறந்த பந்துவீச்சு என்ற சாதனையையும் செய்து இருக்கிறார். அவர் தனது முதல் இரண்டு ஓவர்களில் 4 விக்கெட்களை சாய்த்தார். தனது முதல் ஓவரில் ஃபாஃப் டு ப்ளேசிஸ் மற்றும் ரஜத் படிதார் விக்கெட்களை சாய்த்தார்.

அடுத்து தனது இரண்டாவது ஓவரின் முதல் நான்கு பந்துகளில் விராட் கோலி மற்றும் கேமரான் கிரீன் விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் 10 பந்துகளில் 4 விக்கெட்களை சாய்த்தார். தனது 4 ஓவர்களின் முடிவில் அவர் 29 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். சிறப்பாக பந்து வீசிய ரஹ்மான் தனது முதல் 3 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்த நிலையில், தனது கடைசி ஓவரில் 16 ரன்கள் கொடுத்தார்.
இதுவே ஐபிஎல் தொடரில் வங்கதேச பந்துவீச்சாளர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சாகும். முன்னதாக ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட் வீழ்த்தி இருந்ததே சாதனையாக இருந்தது. அதை முறியடித்த முஸ்தாபிசூர் ரஹ்மான் 29 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் சாய்த்தார். சிஎஸ்கே அணியில் முதன்முறையாக இடம் பெற்ற ரஹ்மான் தனது முதல் போட்டியிலேயே ஐபிஎல் தொடரில் வரலாற்று சாதனை படைத்து இருக்கிறார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது. கடைசி 6 ஓவர்களில் மட்டும் 90 ரன்கள் குவித்தது அந்த அணி. தினேஷ் கார்த்திக் 38, அனுஜ் ராவத் 48 ரன்கள் குவித்தனர். அடுத்து ஆடிய சிஎஸ்கே அணிக்கு ரச்சின் ரவீந்திரா அபார துவக்கம் அளித்தார். அவர் 15 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். ருதுராஜ் 15, ரஹானே 27, டேரில் 22, சிவம் துபே 38, ஜடேஜா 25 ரன்கள் குவிக்க சிஎஸ்கே அணி 18.4 ஓவர்களில் எல்லாம் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.