பெங்களூரு : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் இன்றைய ஆட்டம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. ஆம், ஆர்சிபி, சிஎஸ்கே அணி மோதும் இந்த ஆட்டத்தில் முடிவை பொறுத்துதான் பிளே ஆப் சுற்றுக்கு நான்காவது செல்லப் போகும் அணி எது என்பதை தீர்மானிக்க முடியும்.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு பதினாறு புள்ளிகளுடன் முன்னேறி விடுவார்கள். அதுவே ஆர்சிபி அணி வெற்றி பெற்றால் சில ஓவர்கள் மற்றும் ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே சிஎஸ்கேவை முந்தி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.

இது அனைத்துக்கும் மேலாக பெங்களூருவில் இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. மழை பெய்யும் அளவு நேரம் ஆகியவற்றை பொறுத்துதான் இன்றைய ஆட்டம் நடைபெறுமா? இல்லை ஓவர்கள் குறைக்கப்படுமா என்பது தெரிய வரும். முடிந்தவரை பிசிசிஐ 20 ஓவர்களை முழுமையாக நடத்த தான் பார்க்கும்.
அப்படி இல்லை என்றால் ஓவர்கள் குறைக்கப்பட்டு இலக்கும் மாற்றி அமைக்கப்படும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஆர்சிபி அணி எத்தனை ஓவர்கள் அல்லது எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம். போட்டி 15 ஓவராக குறைக்கப்பட்டு ஆர்சிபி 190 ரன்கள் அடித்தால் சிஎஸ்கே வை 172 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். ஒரு வேளை ஆர்சிபி சேஸிங் செய்தால், 13 புள்ளி 1 ஓவர்களில் எல்லாம் 190 ரன்களை ஆர்சிபி எடுக்க வேண்டும்.
போட்டி 10 ஓவர்களாக குறைக்கப்பட்டால் ஆர்சிபி 140 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சிஎஸ்கேவை 122 ரன்கள் சுருட்ட வேண்டும். ஒரு வேளை சேஸிங் செய்தால், 8 புள்ளி 1 ஓவரில் எல்லாம் இந்த இலக்கை ஆர்சிபி எட்ட வேண்டும். ஐந்து ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டால், ஆர்சிபி 90 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சிஎஸ்கேவை 72 ரன்கள் எல்லாம் சுருட்ட வேண்டும்.
இல்லையெனில் இந்த இலக்கை மூன்று புள்ளி ஒரு ஓவரில் எல்லாம் ஆர்சிபி எட்ட வேண்டும். சின்னசாமி மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமானது என்பதால் இரு அணியிலுமே அதிரடி வீரர்கள் நிறையவே இருக்கிறார்கள். இதனால் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டால் டாஸ் மிகவும் முக்கியமாக மாறும். மேலும் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்கவே முடியாத நிலை இன்று இருக்கும்.