பெங்களூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர் சி பி அணி ரன்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 68வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு சென்று விடும். ஆனால் ஆர் சி பி அணியை பொறுத்தவரை 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். மேலும் பெங்களூரில் மழை எப்போது வேண்டுமானாலும் பெய்யலாம் என்று நிலை இருக்கிறது.

இதனால் 200 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆர் சி பி அணி இருக்கிறது. இந்த சூழலில் முதலில் பேட்டிங் செய்யும் ஆர்சிபி அணி அதிரடியாக விளையாடி வருகிறது. தேஷ் பாண்டே வீசிய முதல் ஓவரில் அவர் அபாரமாக செயல்பட்டு வெறும் இரண்டு ரன்களை மட்டும் தான் விட்டுக் கொடுத்தார். இதை அடுத்து இரண்டாவது ஓவர் வீசிய லார்ட் ஷர்துல் தாக்கூர், ஆர்சிபிக்கு ரன்களை விட்டுக் கொடுத்தார்.
கடினமான பந்துகளை போட்டாலே பொளக்கும் ஆர்சிபி அணி வீரர்களுக்கு இவர் அல்வா மாதிரி பந்தை வீசினார். இதனை பயன்படுத்திக் கொண்டு இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்து விராட் கோலி அசத்திய நிலையில், டுபிளசிஸ், ஐந்தாவது பந்தில் ஒரு பவுண்டரி, ஆறாவது பந்தில் சிக்ஸர் என்று பொளந்தார்.
இதனால் இரண்டாவது ஓவரில் மட்டும் சர்துல் தாக்கூர் 16 ரன்ளை விட்டுக் கொடுத்தார். இதன்மூலம் தேஷ் பாண்டே வீசிய முதல் ஓவர் பயன் அளிக்காத வகையில் சர்துல் தாக்கூர் மாற்றிவிட்டார். இதேபோன்று மூன்றாவது ஓவரிலும் விராட் கோலி இரண்டு சிக்ஸர்களை பறக்க விட்டு, 13 ரன்கள் அந்த ஓவரில் அடித்தார். இதனால் ஆர் சி பி அணி மூன்று ஓவரில் எல்லாம் 31 ரன்கள் எடுத்தது.
சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு மிகவும் சுமாரான வகையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக சர்துல் தாக்கூர் தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி நன்றாக பந்து வீசவில்லை என்றால் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே தோற்பது உறுதி.