பெங்களூரு : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணிக்கு எதிரான மிகவும் முக்கியமான ஆட்டத்தில் சிஎஸ்கேவுக்கு சாதகமாக டாஸ் விழுந்திருக்கிறது. இந்த தொடரில் எப்போதுமே டாசை இழந்து தடுமாறி வந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ்க்கு இன்று அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மழை பெய்யவில்லை என்றாலும் போட்டி நடைபெறும் போது மழையின் குறுக்கீடு நிச்சயம் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

எனினும் போட்டியை தடை செய்யும் அளவுக்கு இது பிரச்சினையாக மாறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மழை குறுக்கிட்டால் போட்டியில் ஓவர்கள் குறைக்கப்படும். அப்போது டக்வொர்த் லூயிஸ் விதிப்படி மாற்றி அமைக்கப்படும்.இந்த சூழலில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகம் இருக்கும். ஏனென்றால் டார்கெட் மாற்றி அமைக்கப்படும்போது சிஎஸ்கே அணி அதற்கு ஏற்றார் போல் விளையாட முடியும்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி, ஆர் சி பி யின் இலக்கு அருகே வரை வர வேண்டும். இந்த நிலையில் டாஸ் வென்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் ருதுராஜ், இன்றைய ஆட்டத்தில் தாங்கள் எந்த நெருக்கடியும் இன்றி விளையாடுவதையே குறிக்கோளாக வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மோயின் அலிக்கு பதில் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் சாண்ட்னர் இடம்பெற்றிருப்பதாக கூறியுள்ளார். மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் ருதுராஜ் தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து பேசிய ஆர் சி பி அணியின் கேப்டன் டுப்ளசிஸ், இன்றைய ஆட்டத்தில் மேக்ஸ்வெல் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும் வெற்றி, தோல்வி இதைப் பற்றி எல்லாம் நாங்கள் நினைக்கவே இல்லை என்றும் இன்றைய ஆட்டத்தில் நன்றாக விளையாட வேண்டும் என்ற உத்வேகத்தில் இருப்பதாகவும் டுபிளசிஸ் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணி முதலில் பந்து வீசும் நிலையில் ஆர்சிபிஐ குறைந்த இலக்கில் சுருட்ட வேண்டும். ஒருவேளை இலக்கு மிகவும் அதிகமாக போனால் சிஎஸ்கே அதன் அருகில் வரை வருவதற்கு திட்டமிட வேண்டும்.