சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய 2024 ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டியில் துஷார் தேஷ்பாண்டே ஓவர்களில் அதிக ரன்கள் போனதால் சிஎஸ்கே ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.
2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. 2023 ஐபிஎல் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இந்தப் போட்டியில் மோதின.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியில் புதிதாக இடம் பெற்ற வங்கதேச வீரர் முஸ்தாபிசூர் ரஹ்மான் தான் வீசிய முதல் இரண்டு ஓவர்களில் 4 விக்கெட்களை கைப்பற்றி ஆர்சிபி அணியை திணற வைத்தார்.

ஆனால், அதை தக்க வைக்க முடியாமல் தவித்தது சிஎஸ்கே அணி. அதற்கு காரணம், துஷார் தேஷ்பாண்டே அதிக ரன்களை வாரி வழங்கியது தான். அவர் 4 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. ஆர்சிபி அணியின் 18வது ஓவரில் மட்டுமே அவர் 25 ரன்கள் கொடுத்து இருந்தார். அந்த ஓவரில் இரண்டு வைடு, மூன்று சிக்ஸ், ஒரு ஃபோர் என வாரிக் கொடுத்து ஒவ்வொரு பந்திலும் சிஎஸ்கே அணியை சோதித்தார்.
மறுபுறம் சிறப்பாக பந்து வீசிய ரஹ்மான் தனது முதல் 3 ஓவர்கால் 13 ரன்கள் மட்டுமே கொடுத்த நிலையில், தனது கடைசி ஓவரில் 16 ரன்கள் கொடுத்தார். இப்படி சிஎஸ்கே பவுலர்கள் வரிசையாக ரன்களை விட்டுக் கொடுக்க கடைசி 6 ஓவர்களில் 90 ரன்கள் குவித்தது ஆர்சிபி அணி. 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது.
அதன் பின் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 18.4 ஓவர்களில் எல்லாம் இலக்கை எட்டியது. சிஎஸ்கே அணி எளிதாக வெற்றி பெற்றதால் துஷார் தேஷ்பாண்டே தப்பினார். சிஎஸ்கே அணியில் புதிதாக இடம் பெற்ற ரச்சின் ரவீந்திரா துவக்க வீரராக 15 பந்துகளில் 37 ரன்கள் குவித்து போட்டியை சிஎஸ்கே வசம் மாற்றினார். அதன் பின் விக்கெட்கள் வீழ்ந்த போதும் ரச்சின் அதிரடியாக சேர்த்த ரன்கள் அணியின் ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்திருந்தது.