சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 2024 ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வி அடைந்து இருக்கிறது. ஏற்கனவே ஐபிஎல் கோப்பை வெல்லாத, ராசியில்லாத அணியாக பார்க்கப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகு 2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியே தோல்வியுடன் துவங்கி இருக்கிறது.
இந்த முதல் போட்டி துவங்கும் போதே அம்பயர்களால் இரண்டு தடங்கல்கள் நடந்தன. முதலில் 7.30 மணிக்கு நடக்க வேண்டிய டாஸ் நிகழ்வு 10 நிமிடம் தாமதமாக 7.40க்கு தான் துவங்கியது. முதலில் நடந்த 2024 ஐபிஎல் துவக்க விழா முடிந்து மைதானத்தை ஒழுங்குபடுத்த சில நிமிடங்கள் ஆனது. ஆனால், ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே கால தாமதம் ஆனது போட்டிக்கான தயார்நிலை மற்றும் திட்டங்கள் குறித்த கேள்விகளை எழுப்பியது.

அடுத்து டாஸ் முடிந்து 8 மணிக்கே போட்டி திட்டமிட்டபடி தொடங்கும் என அறிவித்தனர். சிஎஸ்கே அணியின் வீரர்கள் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துவக்க வீரர்கள் விராட் கோலி, டு பிளேசிஸ் களத்துக்கு வந்து காத்திருந்த நிலையில் அம்பயர்கள் 2 ஒரு நிமிடம் தாமதமாகவே களத்துக்கு வந்தனர். எனவே போட்டி 8.01க்கு தான் துவங்கியது.
இப்படி இரண்டு தடங்கல்களுடன் 2024 ஐபிஎல் தொடர் துவங்கிய நிலையில் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற அனைத்து வாய்ப்புக்களும் இருந்தும் தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 20 ஓவர்களில் 173 ரன்கள் குவித்தது. 78 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து மிக நிதான ஆட்டம் ஆடி வந்த அந்த அணி கடைசி 6 ஓவர்களில் 90 ரன்கள் குவித்து போட்டியை தங்களுக்கு சாதகமாக மாற்றினர்.
ஆனாலும், அடுத்து சிஎஸ்கே அணி ஆடிய போது முதல் 10 ஓவர்களில் 92 ரன்கள் விட்டுக் கொடுத்து சொதப்பினர். 18.4 ஓவர்களில் எல்லாம் சிஎஸ்கே அணி வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதை அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தோல்விப் பாதை மீண்டும் 2024 ஐபிஎல் தொடரிலும் தொடங்கி விட்டதாக பலரும் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர்.