சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலேயே ஜடேஜா ஃபீல்டிங் செய்யவிடாமல் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ராஜஸ்தான் அணிக்கு அவருக்கு ஆப்பு வைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் ரவீந்திரா ஜடேஜா 6 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்த போது, ஃபீல்டிங் செய்யவிடாமல் தடுத்ததற்காக அவுட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் களத்தில் இருந்து கோபத்துடன் ஜடேஜா வெளியேறினார்.

ஃபீல்டிங் டிஸ்டர்ப் செய்தற்காக சிஎஸ்கே அணியில் இருந்து அவுட் கொடுக்கப்பட்ட முதல் வீரர் என்ற மோசமான சாதனையை ஜடேஜா படைத்துள்ளார். இதனால் தோனி அதிகமாக விரும்பும் ஃபேர் பிளே விருதிலும் சிஎஸ்கே அணிக்கு புள்ளிகள் குறைந்துள்ளது. இந்த நிலையில் ஜடேஜா முதல்முறையாக இந்த தவறை செய்யவில்லை என்று தெரிய வந்துள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஸ்டம்பை நோக்கி பந்தை த்ரோ செய்த போது, வேண்டுமென்றே ஜடேஜா இடையில் ஓடி வந்தார். இதனால் சஞ்சு சாம்சன் த்ரோ செய்ய முடியாமல் ஜடேஜாவை முதுகில் வீச வேண்டியதாகியது. இதேபோல் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் ஜடேஜா ரன் அவுட் செய்ய முயன்ற போது, ஸ்டம்பை பார்க்கவிடாமல் ஓடியது தெரிய வந்தது.
புவனேஷ்வர் குமார் பவுலிங்கில் அவரிடமே பந்தை அடித்துவிட்டு ஜடேஜா ரன் ஓட முயன்றார். அப்போது ஜடேஜாவை ரன் அவுட் செய்ய புவனேஷ்வர் குமார் பந்தை எறிந்த போது, ஸ்டம்பை பார்க்கவிடாமல் நேராக நின்று கொண்டார். அப்போது கிளாசன் நடுவரிடம் அப்பீல் செய்த போது, கேப்டன் கம்மின்ஸ் அப்பீலை திரும்ப பெற்று கொண்டார்.
ஐதராபாத் அணி தரப்பில் ஜடேஜாவுக்கு பாவம் பார்க்கப்பட்ட நிலையில், ராஜஸ்தான் அணி கொஞ்சம் கூட கரிசனம் காட்டாமல் ஆப்பு வைத்துள்ளது. இதனால் ஜடேஜா மீண்டும் இதேபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.