சென்னை : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றது குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கருத்து தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே அணி சார்பாக இளம் வீரர் சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது. சிறப்பாக விளையாடிய சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 41 பந்துகளில் 42 ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் சிஎஸ்கே அணி 13 போட்டிகளில் 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதனால் சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அதேபோல் சேப்பாக்கத்தில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியை சிஎஸ்கே அணி வென்று சிறப்பாக நிறைவு செய்துள்ளது. இந்த வெற்றி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், சிஎஸ்கே ரசிகர்களின் ஆதரவு நெகிழ்ச்சியாக உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த கடைசி லீக் போட்டியில் இப்படியான வரவேற்பு இருப்பது உற்சாகத்தை அளித்துள்ளது.
நாங்கள் 55 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து விளையாடிய போது, கொஞ்சம் சொதப்புவதை போல் உணர்ந்தேன். ஏனென்றால் அந்த நேரத்தில் சில விக்கெட்டுகளை இழந்திருந்தால் கூட ராஜஸ்தான் அணியின் கைகள் ஓங்கியிருக்கும். சிஎஸ்கே அணியில் ஏராளமான அதிரடி வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் எனது ரோல், இன்னிங்ஸ் முழுக்க விளையாட வேண்டும் என்பதாக மாறியுள்ளது. இறுதி வரை எந்த அழுத்தமும் இல்லை. இதுபோன்ற பிட்ச்களில் விளையாட தான் ஆவலாக இருக்கிறோம்.
சேப்பாக்கம் மைதானத்தில் பவுண்டரி எல்லை கூடுதலாக இருப்பதால், ஸ்பின்னர்களையும் ஆட்டத்தில் கொண்டு வந்துவிட்டது. அதனால் இங்கு சிக்ஸ் அடிப்பதும் கொஞ்சம் ரிஸ்க் உள்ளது. இந்த பிட்ச் எப்போதும் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் திட்டமாக இருக்கும். ஆனால் ஏராளமான நேரங்களில் பிட்ச் பிளாட்டாக இருக்கும். அதனால் யார்க்கர்களை வீசுவோம். ஆனால் பிட்ச் ஸ்லோவாக இருக்கும் போது, வேகத்தை குறைத்தால், நிச்சயம் உதவி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.