சென்னை : ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியுடன் சிஎஸ்கே நட்சத்திர வீரர் தோனி ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்களிடையே கருத்து நிலவி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 61வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடக்கவுள்ளதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணிக்கு இது வாழ்வா சாவா போட்டியாக அமைந்துள்ளது.

இந்த போட்டியிலும், ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியிலும் வென்றால் மட்டுமே சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் ராஜஸ்தான் அணியை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் சிஎஸ்கே அணி வீரர்கள் தீவிரமாக உள்ளனர். இதனிடையே சேப்பாக்கம் மைதானத்தில் தோனி விளையாடும் கடைசி போட்டியாக இது இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால் தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் இருக்கும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தார். ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்தால், ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்க வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.
அதன்பின் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டிகளில் குவாலிஃபயர் 2 மற்றும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினால் தோனி மீண்டும் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவார் என்றும், இல்லையென்றால் இதுவே தோனிக்கு கடைசி போட்டியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல் தோனிக்கு எப்போதும் ஓய்வை உடனடியாக அறிவிக்கும் பழக்கம் கிடையாது. சர்வதேச கிரிக்கெட்டில் 2 முறை ஓய்வை அறிவித்த போதும், சாதாரணமாக கடிதம் வீடியோ மூலம் அறிவித்து வெளியேறினார். இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் கடைசி போட்டியிலும் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி விளையாடிவிட்டு, ஐபிஎல் தொடருக்கு பின் ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.