சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு முதல்முறையாக 500 ரன்களை அடிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 8 வெற்றி, 3 தோல்வி உட்பட 16 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியான நிலையில், திடீரென அடுத்தடுத்து 2 போட்டிகளில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்துள்ளது.

அதிலும் கையில் இருந்த போட்டியில் ராஜஸ்தான் தோல்வியடைந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் சஞ்சு சாம்சனின் ஆட்டம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது. 46 பந்துகளில் 6 சிக்ஸ், 8 ஃபோர்ஸ் உட்பட 86 ரன்களை சஞ்சு சாம்சன் விளாசினார்.
இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் 5 அரைசதங்கள் உட்பட 471 ரன்களை விளாசி 3வது இடத்தில் உள்ளார். வழக்கமாக ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் சிறந்த ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சன், தொடரின் பின் பகுதியில் ஃபார்மை இழந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இதுவே கடந்த 10 சீசன்களாக தொடர் கதையாக இருந்து வந்தது.
2013ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சஞ்சு சாம்சன் இதுவரை ஒருமுறை கூட 500 ரன்களை குவித்ததில்லை. அதிகபட்சமாக 2021ஆம் ஆண்டு 484 ரன்களையும், 2022ஆம் ஆண்டு 458 ரன்களையும், 2018ஆம் ஆண்டு 441 ரன்களையும் விளாசி இருக்கிறார். ஆனால் இந்த சீசனில் சஞ்சு சாம்சனின் கன்சிஸ்டன்சி சீனியர் வீரர்கள் மட்டுமல்லாமல் பிசிசிஐ தரப்பையும் வியப்படைய செய்துள்ளது.
இதன் காரணமாகவே சஞ்சு சாம்சனுக்கு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் முதல்முறையாக சஞ்சு சாம்சனுக்கு 500 ரன்களை அடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்னும் 3 லீக் போட்டிகள் இருக்கும் நிலையில், சஞ்சு சாம்சனால் எளிதாக 500 ரன்களை எட்ட முடியும். அதேபோல் ஆரஞ்சு கேப் ரேஸிலும் சஞ்சு சாம்சன் வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் சஞ்சு சாம்சன் பேட்டிங் ஃபார்மை தொடர வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.