சென்னை : சென்னையில் சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் தோனியை கடவுளாக்கி, அவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டுனாலும் ஆச்சரியப்பட தேவையில்லை என்று முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்டுகாள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி விளையாடும் கடைசி போட்டி என்பதால், தோனியின் கடைசி போட்டியாக ரசிகர்கள் கருதினர். இதனால் ரசிகர்கள் பலரும் எமோஷனலாக காணப்பட்டனர்.

இந்த வெற்றிக்கு பின் சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மைதானத்தை சுற்றி வந்தது. அப்போது சிஎஸ்கே அணி தரப்பில் மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு தோனியின் கையெழுத்திட்ட ஜெர்சியும், தோனியின் கையெழுத்துடன் கூடிய பந்துகளும் அளிக்கப்பட்டன. அதேபோல் சூப்பர் ஃபேன்ஸ்-க்கு நன்றி என்று மைதானத்தின் உள்ளே செல்லும் போது அளிக்கப்பட்ட கார்டுகள் நெகிழ்ச்சியடைய வைத்தன.
அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் அனைவரும் தோனியை அருகில் பார்க்கும் வகையில், அவர் பவுண்டரிக்கு அருகில் நடந்து சென்று நன்றி சொன்னது கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியது. போட்டி முடிவடைந்து 1 மணி நேரமான போதும், ஒருவர் கூட மைதானத்தில் இருந்து வெளியில் வராதது ஒளிபரப்பாளர்கள், வர்ணனையாளர்கள், முன்னாள் வீரர்களுக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
இதுகுறித்து சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு பேசுகையில், சென்னையில் தோனி கடவுளை பார்க்கப்படுகிறார். இன்னும் சில ஆண்டுகளில் தோனிக்கு ரசிகர்கள் இணைந்து கோயில் கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இந்தியாவுக்காக இரு உலகக்கோப்பைகளை வென்று கொடுத்தவர்.
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக கோப்பைகளையும், பட்டத்தையும் வென்று கொடுத்தவர் தோனி. சென்னை மக்களின் முகங்களில் சிரிப்பை கொண்டு வந்தவர். அதேபோல் வீரர்களின் மனங்களில் நம்பிக்கையை கொண்டு வந்து, நாட்டுக்காகவும், இந்திய அணிக்காகவும், சிஎஸ்கே அணிக்காகவும் வெற்றிகளை பெற்று கொடுத்தவர் என்று தெரிவித்துள்ளார்.