சென்னை : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் செய்யவிடாமல் தடுத்ததற்காக சிஎஸ்கே அணியின் ஜடேஜாவுக்கு அவுட் கொடுக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே சேர்த்தது. சேப்பாக்கம் பிட்ச் ஸ்லோவாக மாறியதால், ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்க்க திணறினர்.

இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 14 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் கேப்டன் ருதுராஜ் - ஜடேஜா கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் இணைந்து நிதானமாக ரன்கள் சேர்க்க தொடங்கினர். தேவைக்கேற்ப பவுண்டரிகள் அடித்தும் ரன்கள் சேர்க்கப்பட்டது. இந்த நிலையில் 16வது ஓவரை வீச ஆவேஷ் கான் வந்தார்.
இந்த ஓவரின் முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் சேர்க்கப்பட, 5வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா, தேர்ட் மேன் திசையில் அடித்தார். அப்போது ஒரு ரன்னை எடுத்த போது, ஜடேஜா 2வது ரன்னுக்காக திரும்பினார். ஆனால் ருதுராஜ் வேண்டாமென்று கத்தினார். ஆனால் அதனை கொஞ்சம் கூட காதில் வாங்காமல் ஜடேஜா ஓடி வந்தார். அப்போது பந்து விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கைகளில் இருந்தது.
அவர் சரியாக ஸ்டம்புக்கு த்ரோ எறிய, அந்த பந்து ஜடேஜாவின் முதுகில் அடித்தது. அப்போது ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் நடுவரிடம் ஜடேஜா ஃபீல்டிங் செய்யவிடாமல் தடுத்ததாக கூறி முறையீடு செய்தார். இதனால் 3வது நடுவரிடம் அப்பீல் கொண்டு செல்லப்பட்டது. அந்த ரீ-பிளேவில், சஞ்சு சாம்சன் கைகளுக்கு வரும் வரை ஜடேஜா பந்தின் மீது கண் வைத்தது தெரிய வந்தது.
அதன்பின் சஞ்சு சாம்சன் த்ரோ எறியும் போது, திசையை மாற்றாமல் ஸ்டம்புக்கு நேராக ஓடி வந்தது தெரிய வந்தது. இதன்பின் 3வது நடுவர் ஜடேஜாவை ஃபீல்டிங் செய்யவிடாமல் தடுத்ததற்காக அவுட் கொடுத்தார். இதனால் டென்ஷனான ஜடேஜா 5 ரன்கள் எடுத்து, கத்திக்கொண்டே பெவிலியின் நோக்கி நடந்தார். இதற்கு முன் ஐபிஎல் தொடரில் ஃபீல்டிங் செய்யவிடாமல் தடுத்ததற்காக யூசுப் பதான் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர்.