சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் சிஎஸ்கே - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவடைந்த பின், ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கமாறு சிஎஸ்கே அணி நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த சீசனில் சென்னை அணி சொந்த மண்ணில் விளையாடும் கடைசி லீக் போட்டி என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல் சில ஆண்டுகளுக்கு முன், எனது கடைசி போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் தான் இருக்கும் என்று தோனி அறிவித்திருந்தார்.

பிளே ஆஃப் போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், தோனி இன்றைய ஆட்டத்துடன் ஓய்வை அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதற்கேற்றபடி தோனியின் மனைவி சாக்ஷி, சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, தோனியின் நண்பர்கள் என்று பலரும் சேப்பாக்கம் மைதானத்தில் கூடியுள்ளனர்.
இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் சிஎஸ்கே அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில், சிஎஸ்கே - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவடைந்த பின் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்க வேண்டும். ஸ்பெஷலான விஷயங்கள் காத்திருக்கிறது. எல்லோருக்கும் நன்றி என்று பதிவிடப்பட்டுள்ளது.
இதனால் தோனி ஓய்வை அறிவிப்பாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளன. ஆனால் ஒவ்வொரு முறையும் சிஎஸ்கே அணி சொந்த மண்ணில் கடைசி போட்டியை விளையாடிய பின், ரசிகர்களுக்கு நன்றி கூறும் வகையில் மைதானத்தை சுற்றி வந்து வீரர்கள் அனைவரும் நடந்து வருவார்கள். அப்போது டென்னிஸ் பந்துகளையும், சிஎஸ்கே ஜெர்சியையும் ரசிகர்களுக்கு தோனி வழங்குவார். இதனால் நன்றி கூறுவதற்காகவே ரசிகர்கள் காத்திருக்க சிஎஸ்கே நிர்வாகம் கோரியுள்ளதாக பார்க்கப்படுகிறது.