ஹைதராபாத் : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது. சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்ட பின் சிஎஸ்கே அணி சந்திக்கும் இரண்டாவது தோல்வி இதுவாகும்.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சிஎஸ்கே அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற போதும், அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் அனுபவத்தால் எடுத்த சில முடிவுகளால் சிஎஸ்கே அணி தடுமாறியது.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது பாட் கம்மின்ஸ் பிட்ச்சை பரிசோதிக்க ஒரு முடிவு செய்தார். தங்கள் அணியின் பகுதி நேர சுழற் பந்துவீச்சாளர் அபிஷேக் சர்மாவை முதல் ஓவரை வீசச் செய்தார். அந்த ஓவரில் சிஎஸ்கே அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த ஓவரில் பந்து பிட்ச்சில் பட்டவுடன் சற்று நின்று சென்றது. அதை வைத்தே வேகப் பந்துவீச்சாளர்கள் எப்படி தங்கள் ஓவர்களில் பந்து வீச வேண்டும் என்ற திட்டத்தை அவர் செயல்படுத்தினார். அதன்படி அனைத்து வேகப் பந்துவீச்சாளர்களும் தங்கள் வேகத்தை குறைத்து பந்து வீசினர்.
அதனால், சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் பந்தை சரியான நேரத்தை கணக்கிட்டு அடிக்க திணறினர். பின்னர் சிவம் துபே சுழற் பந்துவீச்சாளர்களை மட்டுமே குறி வைத்து அடிப்பதை பார்த்த பாட் கம்மின்ஸ் அதன் பின் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு ஓவரே கொடுக்கவில்லை.
அபிஷேக் சர்மாவை தவிர்த்து ஆறு பந்துவீச்சாளர்கள் அணியில் இருந்ததால் அவரால் எளிதாக இதை செய்ய முடிந்தது. அந்த வகையில் அணித் தேர்வில் பாட் கம்மின்ஸ் சரியாக முடிவு எடுத்து இருந்தார். இதை அடுத்து சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து சிஎஸ்கே அணி பந்து வீசிய போது ருதுராஜ் கெய்க்வாட் அனுபவமின்மையால் பந்துவீச்சாளர்களுக்கு எந்த மாதிரியாக பந்து வீச வேண்டும் என தெளிவான திட்டத்தை சொல்லவில்லை. அதே போல, இம்பாக்ட் வீரராக வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் சவுத்ரியை தேர்வு செய்து இருந்தார். அவர் ஒரு ஓவர் மட்டுமே வீசி 27 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அவரை தேர்வு செய்ததற்கு பதிலாக அனுபவம் கொண்ட ஷர்துல் தாக்குரை அணியில் தேர்வு செய்து இருக்க வேண்டும். அந்த இடத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் ஜெய்க்வாட் சறுக்கி இருக்கிறார்.
சமயம் ருதுராஜ் கெய்க்வாட் அணித் தேர்வு மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு ஓவர் கொடுப்பதில் சொதப்பினார். என்னதான் தோனி களத்துக்கு வெளியே ஆலோசனை கூறினாலும் ஆடுகளத்துக்கு உள்ளே ருதுராஜ் கெய்க்வாட் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார். அந்த வகையில் பாட் கம்மின்ஸ் முன் ருதுராஜ் கெய்க்வாட் தடுமாறியது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.