ஐதராபாத் : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் நல்ல தொடக்கம் கிடைத்தும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்புக்கு வந்துள்ளார். சிஎஸ்கே அணிக்காக விளையாட தொடங்கிய காலம் முதலே ருதுராஜ் கெய்க்வாட் ஒவ்வொரு சீசனிலும் குறைந்தபட்சம் 500 ரன்களை விளாசி வந்தார். இந்த கன்சிஸ்டன்சி மற்றும் சிஎஸ்கே அணியில் விளையாடிய அனுபவம் காரணமாகவே ருதுராஜ் கெய்க்வாட்-க்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது.

இருப்பினும் கேப்டன் பதவிக்கு வந்த பின் சில வீரர்களுக்கு பேட்டிங் ஃபார்ம் குறையும். இந்திய கிரிக்கெட்டில் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சிஎஸ்கே அணியின் ஜடேஜாவும் கூட கேப்டன்சியை ஏற்றதால், பவுலிங் மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்று கூறி பதவி விலகினார்.
இதனால் கேப்டன்சி பிரஷரை ருதுராஜ் கெய்க்வாட் எப்படி சமாளிப்பார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 15 ரன்களும், குஜராத் அணிக்கு எதிரான 2வது போட்டியில் 46 ரன்களும், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன்னிலும், தற்போது ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 26 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.
இந்த சீசனில் 4 போட்டிகளில் விளையாடி 88 ரன்களை மட்டுமே ருதுராஜ் கெய்க்வாட் சேர்த்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ருதுராஜ் கெய்க்வாட்-ன் ஸ்ட்ரைக் ரேட்டும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ருதுராஜ் கெய்க்வாட்-ம் கேப்டன்சி பிரஷரை உணர்ந்து பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியாமல் தவித்து வருவதாக பார்க்கப்படுகிறது.
இதனால் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விரைவில் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்று அந்த அணியின் ரசிகர்கள் பேசி வருகின்றனர். ஏற்கனவே ரச்சின் ரவீந்திரா பேட்டிங்கில் சொதப்பி வரும் நிலையில், மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட்-ம் பேட்டிங் சொதப்புவது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.