ஐதராபாத் : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதிரடியாக விளையாடிய சிவம் துபே 24 பந்துகளில் 4 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 45 ரன்களை சேர்த்தார்.

இதன்பின் 166 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு, ட்ராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரின் 2வது பந்திலேயே ட்ராவிஸ் ஹெட் கொடுத்த கேட்சை மொயின் அலி தவறவிட்டார். இதன்பின் முகேஷ் சவுத்ரி வீசிய 2வது ஓவரில் இளம் வீரர் அபிஷேக் சர்மா 3 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 27 ரன்களை விளாசி பொளந்து கட்டினார்.
பின்னர் தீபக் சஹர் வீசிய 3வது ஓவரிலும் சிக்ஸ், பவுண்டரி அடித்த அபிஷேக் சர்மா, அதே ஓவரில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து 11 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த மார்க்ரமும் அதிரடியாக சில பவுண்டரிகளை விளாச, பவர் பிளே ஓவர்களின் முடிவில் ஐதராபாத் அணி 64 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் ஐதராபாத் அணியை அதிரடியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.
இதனால் 9 ஓவர்களிலேயே ஐதராபாத் அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. தொடர்ந்து தீக்சனா ஓவரில் ட்ராவிஸ் ஹெட் 31 ரன்களில் ஆட்டமிழக்க, மொயின் அலி அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். பின்னர் மார்க்ரம் 35 பந்துகளில் அரைசதம் அடித்து வெளியேறினார். தொடர்ந்து ஆல்ரவுண்டரி ஷாபாஸ் அஹ்மத்தும் 18 ரன்களில் ஆட்டமிழக்க, போட்டி கொஞ்சம் சுவாரஸ்யமானது.
ஆனால் பின்னர் வந்த கிளாசன் - நிதீஷ் ரெட்டி கூட்டணி கொஞ்சம் கூட பதற்றமடையாமல் 18.1 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து வெற்றிபெற வைத்தனர். இதனால் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் சிஎஸ்கே அணி அடுத்தடுத்த 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.