ஐதராபாத் : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் வேகப்பந்துவீச்சாளர் முஷ்டாஃபிசுர் ரஹ்மான் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி உட்பட 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வென்ற சிஎஸ்கே, விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5ஆம் தேதி ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. இந்த போட்டிக்கு முன் சிஎஸ்கே அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி 2 போட்டிகளில் வென்றதற்கு காரணமாக அமைந்த முஷ்டாஃபிசுர் ரஹ்மான் திடீரென வங்கதேசத்திற்கு திரும்பியுள்ளது தெரிய வந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் நடக்கவுள்ளது. இந்த டி20 உலகக்கோப்பை தொடர், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா மைதானங்களில் நடக்கவுள்ளது. அமெரிக்காவில் இஸ்லாமியர்களுக்கு விசா கிடைப்பதில் சில பிரச்சனைகள் இருப்பதால், வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் விசாவுக்கான முன்னேற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டன.
இதனால் விசா நடவடிக்கைகளுக்கான முஷ்டாஃபிசுர் ரஹ்மான் வங்கதேசத்திற்கு திரும்பியுள்ளார். இதனால் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முஷ்டாஃபிசுர் ரஹ்மான் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் விசா நடவடிக்கைகள் தாமதமாகும் பட்சத்தில் ஏப்ரல் 8ஆம் தேதி நடக்கும் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் இவர் பங்கேற்பதில் சிக்கல் எழும் என்று தெரிய வருகிறது.
சிஎஸ்கே அணிக்காக 3 போட்டிகளில் விளையாடியுள்ள முஷ்டாஃபிசுர் ரஹ்மான் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை வென்றுள்ளார். இதனால் இவருக்கு மாற்றாக யாரை சிஎஸ்கே அணி களமிறக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முஷ்டாஃபிசுர் ரஹ்மான் இடத்தில் ஷர்துல் தாக்கூர் அல்லது மொயின் அலி இருவரில் ஒருவர் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.