ஐதராபாத் : சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றிபெற 166 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். சிஎஸ்கே அணி தரப்பில் பதிரானா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான் மற்றும் சமீர் ரிஸ்வி ஆகியோருக்கு பதில் மொயின் அலி, தீக்சனா மற்றும் முகேஷ் சவுத்ரி சேர்க்கப்பட்டனர். இதன்பின் சிஎஸ்கே அணி தரப்பில் ரச்சின் - ருதுராஜ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

ஐதராபாத் அணி தரப்பில் அபிஷேக் சர்மா முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரிலேயே ரச்சின் ரவீந்திரா பவுண்டரி அடித்து அதிரடியாக தொடங்கினார். அடுத்தடுத்து ருதுராஜ், ரச்சின் இருவருமே பவுண்டரிகளாக விளாசிய நிலையில், புவனேஷ்வர் குமாரை அட்டாக் செய்ய நினைத்து ரச்சின் ரவீந்திரா 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் ருதுராஜ் - ரஹானே கூட்டணி இணைந்தது.
தொடர்ந்து கம்மின்ஸ் பவுலிங்கில் அபாரமாக ஒரு சிக்ஸ் அடித்து ரஹானே அதிரடியாக தொடங்க, பவர் பிளே ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் ஒரு விக்கெட் இழப்பிற்கு 48 ரன்களாக இருந்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் சிக்ஸ் அடிக்க முயற்சித்து 26 ரன்களில் ஆட்டமிழக்க, உடனடியாக சிவம் துபே களமிறக்கப்பட்டார். அவர் வழக்கம் போல் ஸ்பின்னர்களை கண்டதும் பொளந்து கட்ட தொடங்கினார்.
இதனால் 10 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ரன்களை சேர்த்திருந்தது. சிறப்பாக ஆடிய ரஹானே திடீரென பவுண்டரி அடிக்க முடியாமல் தடுமாறினார். இதனால் சிவம் துபே, நடராஜன் பவுலிங்கிலும் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட, ரசிகர்கள் மிரண்டு போயினர். சிறப்பாக ஆடிய அவர் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 45 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் திடீரென ஆச்சரியமளிக்கும் வகையில் ஜடேஜா களமிறங்கினார்.
தொடர்ந்து பவுண்டரி அடிக்க தடுமாறிய ரஹானேவும் 35 ரன்களில் வெளியேற, சிஎஸ்கே அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. இதனால் ஃபினிஷிங் செய்யும் பொறுப்பு ஜடேஜா - மிட்சல் கூட்டணியின் கைகளுக்கு வந்து சேர்ந்தது. கம்மின்ஸ் வீசிய 18வது ஓவரில் 2 பவுண்டரி உட்பட 13 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், புவனேஷ்வர் குமார் வீசிய 19வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. கடைசி ஓவரை வீச நடராஜன் அழைக்கப்பட்டார்.
அந்த ஓவரின் 3வது பந்தில் மிட்சல் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் தோனி வருவதை உணர்ந்து ஐதராபாத் மைதான ரசிகர்கள் கோஷம் எழுப்ப தொடங்கினர். பின்னர் தோனி ஒரு ரன் எடுத்து எதிர்முனைக்கு சென்றார். கடைசி பந்தில் ஜடேஜா பவுண்டரி அடித்ததால், சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. கடைசி வரை களத்தில் இருந்த ஜடேஜா 23 பந்துகளில் 31 ரன்களை சேர்த்தார்.