சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதமடிக்க முடியவில்லை என்பதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 54 பந்துகளில் 3 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 98 ரன்களை விளாசினார்.

இதன்பின் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.5 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.சிஎஸ்கே அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டெ 4 விக்கெட்டுகளையும், பதிரானா மற்றும் முஸ்தஃபிசுர் ரஹ்மான் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலமாக சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த வெற்றி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், அதிக ஈரப்பதம் உள்ள பிட்சில் விளையாடுவது எப்போதும் கடினமானது. அப்படியான நேரத்தில் 70க்கும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவது நிச்சயம் சிறப்பானது. டாஸில் தோல்வியடைந்தது கெட்டதிலும் ஒரு நன்மை என்று எடுத்து கொள்ளலாம். விரல்களில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த காயமும் இல்லை.
கடந்த போட்டியிலும் 20 ஓவர்கள் பேட்டிங் செய்துவிட்டு, 20 ஓவர்களும் களத்தில் இருந்தேன். இன்றைய ஆட்டத்திலும் அப்படியே நடந்தது. அதனால் கொஞ்சம் சோர்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல் 98 ரன்கள் எடுத்திருந்த போது, சதத்தை பற்றி சிந்திக்கவில்லை. 220 ரன்களுக்கு மேல் இலக்கை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஏனென்றால் கடைசி சில ஓவர்கள் என்னால் வேகமாக ரன்கள் சேர்க்கமுடியவில்லை என்பதை நினைத்து சோகமாக இருந்தது.
ஆனால் 213 ரன்கள் இலக்கே போதுமானது என்பது கொஞ்சம் நிம்மதியாக உள்ளது. கடந்த போட்டியில் நாங்கள் சில தவறுகளை செய்தோம். ஆங்காங்கே சில மோசமான பந்துகளை வீசினோம். இந்த ஆட்டத்தில் எங்களின் ஃபீல்டிங் அற்புதமாக இருந்தது. அதேபோல் சூழலுக்கு ஏற்ப திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினோம். இம்பேக்ட் பிளேயர் விதியால் எப்போதும் கூடுதலாக 20 ரன்கள் தேவைப்படுகிறது. எது வெற்றிக்கான இலக்கு என்பதை அறிவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த போட்டியில் துஷார் தேஷ்பாண்டே பவர் பிளேவில் விக்கெட் வீழ்த்தி சாதகத்தை ஏற்படுத்தினார். அவரின் கடின உழைப்பிற்கு பலன் கிடைத்து வருகிறது. அதேபோல் ஜடேஜாவின் பவுலிங்கை யாரும் மறக்க கூடாது. ஈரப்பதம் அதிகமிருந்த பிட்சில், 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். அதுதான் ஆட்டத்தை மாற்றிய ஸ்பெல் என்று கருதுகிறேன். அதேபோல் சீனியர் வீரர்களிடம் சென்று என்ன செய்ய வேண்டும் என்று நான் கூற மாட்டேன். அவர்களின் பணிகளை அவர்கள் சிறப்பாக செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.