ஐதராபாத் : டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட அபிஷேக் சர்மா தயாராகவில்லை என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியின் ஆட்டம் சாம்பியன் அணிகளான மும்பை, சிஎஸ்கே, கொல்கத்தா உள்ளிட்ட அணிகளுக்கே பீதியை கொடுத்துள்ளது. சர்வ சாதாரணமாக 250 ரன்களை விளாசும் அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்டு ஐதராபாத் அணியின் பேட்டிங் வரிசை கட்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொடக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் பொளந்து கட்டி வருகின்றனர்.

குறிப்பாக அபிஷேக் சர்மா ஸ்பின்னர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களை வேற லெவலில் அட்டாக் செய்து வருகிறார். இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் சர்மா 26 சிக்ஸ், 21 ஃபோர்ஸ் உட்பட 288 ரன்களை விளாசி இருக்கிறார். 12 பந்துகளில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை அபிஷேக் சர்மா ஜஸ்ட் மிஸ்ஸில் தவறவிட்டார். இதனால் அபிஷேக் சர்மாவை டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளன.
இதுகுறித்து அபிஷேக் சர்மாவின் குருவான யுவராஜ் சிங் பேசுகையில், அபிஷேக் சர்மா இந்திய அணிக்காக விளையாட தயாராகி வருகிறார். ஆனால் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கு இன்னும் தயாராகவில்லை என்றே நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி அனுபவம் வாய்ந்த அணியை தேர்வு செய்ய வேண்டும். டி20 உலகக்கோப்பைக்கு பின் அபிஷேக் சர்மா இந்திய அணிக்காக விளையாட தயாராக இருக்க வேண்டும்.
அதுதான் அவரின் கவனத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் வாழ்க்கையில் அடுத்த 6 மாதங்கள் மிகவும் முக்கியமானவை. கடந்த சீசன்களை ஒப்பிடும் போது அவர் நிச்சயம் முன்னேற்றம் கண்டிருக்கிறார். குறிப்பாக ஸ்ட்ரைக் ரேட் அசத்தலாக இருந்தாலும், பெரிய ஸ்கோரை இதுவரை அடிக்கவில்லை. இந்திய அணியில் இடம்பிடிக்க விரும்பினால், நிச்சயம் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும். சதம் விளாசினால் மட்டுமே இந்திய அணியில் இடம் கிடைக்கும்.
அவரால் பெரிய ஷாட்களை விளையாட முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஒரு ரன்னை எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றி, பார்ட்னர்ஷிப் அமைக்க கற்றுக் கொள்ள வேண்டும். சிறந்த பவுலர்களை எப்படி எதிர்த்து விளையாட வேண்டும் என்பதையும், யாரை குறி வைத்து அடிக்க வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். அதனை நோக்கி அபிஷேக் சர்மா செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.
ட்ராவிஸ் ஹெட் போன்ற அனுபவம் வாய்ந்த வீரருடன் விளையாடும் போது அபிஷேக் சர்மா நிச்சயம் கற்றுக் கொள்ள முடியும். உலகக்கோப்பை இறுதிப்போட்டி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி உள்ளிட்டவற்றில் ட்ராவிஸ் ஹெட் சதம் விளாசி இருக்கிறார். முக்கிய போட்டிகளில் சாதிக்க கூடிய பேட்ஸ்மேனாக உள்ளார். அதனால் பெரிய ஸ்கோரை விளாசுவது எப்படி என்று அவரிடம் அபிஷேக் சர்மா கற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.