சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் பதிரானா 2 ஓவர்கள் மட்டும் வீசிய பின், ஓய்வறைக்கு சென்றது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலம் வாய்ந்த ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளது. இதன் மூலம் ஐதராபாத் மண்ணில் அடைந்த தோல்விக்கு சிஎஸ்கே அணி பதிலடி கொடுத்துள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் பவுலர்கள் மிரட்டலாக பவுலிங் செய்தனர். பவர் பிளே ஓவர்களிலேயே 3 விக்கெட்டை வீழ்த்தி இருந்தாலும், மார்க்ரம் - ட்ராவிஸ் ஹெட் கூட்டணி களத்தில் இருந்தது.

இவர்கள் இன்னும் சில ஓவர்கள் களத்தில் இருந்தால், ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் கைகள் ஓங்கும் என்று பார்க்கப்பட்டது. சரியாக 11வது ஓவரை வீச பதிரானா வந்தார். இந்த ஓவரின் 5வது பந்தில் மார்க்ரமிற்கு 147 கிமீ வேகத்தில் தரமான யார்க்கர் ஒன்றை வீசினார் பதிரானா. இதனை சற்றும் எதிர்பார்க்காத மார்க்ரம், மிடில் ஸ்டம்பை பறி கொடுத்து 32 ரன்களுக்கு பரிதாபமாக வெளியேறினார்.
தொடர்ந்து 16வது ஓவரை வீச மீண்டும் வந்தார் பதிரானா. இந்த ஓவரின் 5வது பந்தில் கிளாசனை 20 ரன்களில் வீழ்த்தி பெவிலியன் அனுப்பி வைத்தார். இதன் மூலமாக சிஎஸ்கே அணியின் வெற்றி உறுதியானது. இந்த ஓவருக்கு பின் மீண்டும் டெத் ஓவரில் பவுலிங் செய்ய பதிரானா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பிசியோதெரஃபிஸ்ட் உடன் ஓய்வறையை நோக்கி நடந்தார்.
இதனால் டெத் ஓவர்களை முஸ்தஃபிசுர் ரஹ்மான் மற்றும் ஷர்துல் தாக்கூர் இணைந்து வீசினர். இதனால் பதிரானாவுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டதா என்ற குழப்பம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே பதிரானாவின் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் தாமதமாகவே சிஎஸ்கே அணியுடன் பதிரானா இணைந்தார்.
தற்போது முக்கியமான ஆட்டத்தில் 2 ஓவர்களை மட்டும் வீசிவிட்டு களத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார். இந்த போட்டியில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்பதாலேயே பதிரானா ஓய்வறைக்கு அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் பதிரானா குறித்து முழுமையான அப்டேட் வெளிவரவில்லை. இதனால் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்குவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.