சென்னை : லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ்-க்கு முன்னாள் கேப்டன் தோனி அட்வைஸ் செய்துள்ள சம்பவம் தெரிய வந்துள்ளது.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி இன்று விளையாடவுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள இந்த போட்டியில் வெற்றிபெற சிஎஸ்கே அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஏனென்றால் லக்னோ அணிக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடிய போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தது.

இதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் சரிவை சந்தித்ததுடன், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் சீசனிலேயே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்றால், ரசிகர்களிடையே விமர்சனங்கள் அதிகரிக்கும்.
இந்த பதற்றம் ருதுராஜ் கெய்க்வாட்-க்கும் இருப்பதாக தெரிகிறது. ஏனென்றால் சிஎஸ்கே முன்னாள் வீரர் பத்ரிநாத் பேசுகையில், லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது முக்கியமான ஒரு பவுலிங் மாற்றம் செய்வது குறித்து தோனியிடம் ஆலோசனை கேட்டுள்ளார் ருதுராஜ் கெய்க்வாட். அதற்கு தோனி சம்மதம் கூறியுள்ளார்.

ஆனால் உடனடியாக ருதுராஜிடம், அடுத்து வரும் போட்டிகளில் என்னிடம் எந்த ஆலோசனையையும் கேட்க வேண்டாம் என்று நேரடியாக தோனி கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார். இது சிஎஸ்கே அணி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக முன்னேறுவதற்கு தோனி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் கேப்டனாக ஒவ்வொரு முறையும் ருதுராக் கெய்க்வாட் எடுக்கும் முடிவுகள் தவறாக நடக்கும் போது மட்டுமே, அவரால் கற்றுக் கொள்ள முடியும். அழுத்தமான நேரங்களில் ருதுராஜ் கெய்க்வாட் முடிவு எடுக்க முடியாமல் திணறினால், அது வரும் காலங்களில் சிஎஸ்கே அணிக்கு பின்னடைவை கொடுக்கும் என்பதால், தோனி நேரடியாக அட்வைஸ் செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது.