சென்னை : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் தோனியை புகழ்ந்த மனோஜ் திவாரி பேசிய போது, ஹர்பஜன் சிங் டென்ஷனான சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி முதல்முறையாக 2010ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் 15 ஆண்டு தின கொண்டாட்டம் நேற்று ரசிகர்களால் சோசியல் மீடியாவில் கொண்டாடப்பட்டது. ஏராளமான ரசிகர்களும் 2010ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் சென்னை - மும்பை அணிகளுக்கு இடையிலான நினைவினை பகிர்ந்து வந்தனர்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது. சிஎஸ்கே அணி தரப்பில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 35 பந்துகளில் 57 ரன்களை சேர்த்தார். இதன்பின் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
இந்த போட்டியில் கடைசி நெரத்தில் மும்பை அணியின் பொல்லார்ட் அதிரடியாக 10 பந்துகளில் 2 சிக்ஸ், 3 ஃபோர்ஸ் உட்பட 27 ரன்களை சேர்த்திருந்தார். அப்போது பொல்லார்டை வீழ்த்த தோனி அமைத்த ஃபீல்டிங் ரசிகர்களிடையே இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2010 ஐபிஎல் இறுதிப்போட்டி குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஸ்பெஷல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் முன்னாள் வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் மனோஜ் திவாரி பங்கேற்றனர். அப்போது மனோஜ் திவாரி பேசுகையில், கடைசி நேரத்தில் களமிறங்கிய தோனி 15 பந்துகளில் 22 ரன்களை சேர்த்தார். அதேபோல் ஒற்றை கையில் அடித்த சிக்சர் இன்றும் நினைவில் உள்ளது என்று புகழ்ந்தார். அப்போது கடுப்பான ஹர்பஜன் சிங், அந்தப் போட்டியில் தோனி ஸ்பெஷலாக எதையும் செய்துவிடவில்லை.
இவ்வளவு ஏன், மும்பை அணியின் பொல்லார்ட் கூட சிறப்பாக விளையாடி சில சிக்சர்களை விளாசினார். வெறும் ஒற்றை கைகளால் ஒரு சிக்ஸ் அடித்தது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. இது எல்லா போட்டிகளிலும் நடப்பது தான் என்று காட்டமாக பதில் அளித்தார். இந்த வீடியோ சோசியில் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த இறுதிப்போட்டியில் ஹர்பஜன் சிங் மும்பை அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.