ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி இடம் பெற்று இருக்கவே கூடாது என முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டல், சிஎஸ்கே ரசிகர்களை சீண்டும் வகையில் பேசி இருக்கிறார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் தோனி கடைசி மூன்று பந்துகள் இருக்கும் போது தான் பேட்டிங் செய்ய ஆடுகளத்துக்கு வந்தார். அம்பத்தி ராயுடு, ஹர்பஜன் சிங் போன்றோர் கடைசி 4 ஓவர்கள் மீதமிருக்கும் போது டேரில் மிட்செலுக்கு பதில் தோனி களமிறங்கி இருந்தால் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் உயர்ந்து இருக்கும் என கூறிய நிலையில் சைமன் டல் அதற்கு நேர்மாறாக கூறி இருக்கிறார்.

சிஎஸ்கே அணியின் முந்தைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக ஆடும் போது தோனியின் காலில் வீக்கம் ஏற்பட்டு இருந்தது. இதை எனினும், அந்தப் போட்டியில் அவர் 16 பந்துகளில் 37 ரன்கள் குவித்து இருந்தார். அப்போது தோனி காலில் வலி இருந்ததால் சிங்கிள் ரன் ஓடவில்லை.
அதை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார் சைமன் டல். தோனி ஒற்றை ரன்களை எடுக்காமல் விட்டது வியப்பை ஏற்படுத்தியதாக அவர் கூறி இருந்தார். இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஏன் வலியோடு பேட்டிங் ஆட வந்தார்? அவரை அணியில் சேர்த்ததே தவறு என மீண்டும் விமர்சனத்தை முன் வைத்து இருக்கிறார் சைமன் டல்.
இது பற்றி சைமன் டல் கூறுகையில், "கடந்த ஆட்டத்தில் தோனி மோசமாக காயமடைந்தார். அதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான பிளேயிங் லெவனில் தோனி இடம் பெற்று இருக்கக் கூடாது. டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் அவரால் ஒரு ரன் கூட ஓட முடியவில்லை. ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்கு அவர் அதிசயமாக தயாராகி வந்திருக்கிறார்." என்றார்.