சென்னை : சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 8வது முறையாக டாஸில் தோல்வியடைந்திருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி களமிறங்கியுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தின் இரண்டாம் பாதியில் அதிகளவிலான ஈரப்பதம் வருவதால், பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறி வருகிறது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்ததற்கு காரணமாகவும் அமைந்தது.

இதனால் இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் வேண்டி வந்தனர். ஆனால் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதன் மூலமாக சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 9 போட்டிகளில் விளையாடி 8வது முறையாக டாஸில் தோல்வியடைந்துள்ளார்.
கேகேஆர் அணிக்கு எதிரான ஒரேயொரு போட்டியில் மட்டுமே ருதுராஜ் கெய்க்வாட் டாஸில் வென்றுள்ளார். இது சிஎஸ்கே ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், முதல் பேட்டிங் செய்வதில் நிச்சயம் மகிழ்ச்சி இல்லை. இன்றைய நாளில் 2வது முறையாக டாஸ் வெல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
ஆனால் டாஸ் நமது கைகளில் இல்லை. நாங்கள் நல்ல ஸ்கோரை எடுத்தால், நிச்சயம் ஐதராபாத் அணியை அழுத்தத்திற்கு தள்ள முடியும். கடந்த போட்டியில் முக்கியமான தருணத்தை நாங்கள் வெல்லவில்லை. அதேபோல் பேட்டிங்கின் போது 2 முதல் 3 ஓவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. பவுலிங்கிலும் பவர் பிளேவில் நினைத்த தொடக்கம் கிடைத்தது. ஆனால் கடைசியில் சிறப்பாக முடிக்கவில்லை. இருந்தாலும் எங்களின் மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.