ஐதராபாத் : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு அபிஷேக் சர்மாவின் பவர் பிளே ஆட்டமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா புதிய உச்சத்தை எட்டி வருகிறார். கடந்த சில சீசன்களாகவே தொடர்ந்து விளையாடினாலும், அபிஷேக் சர்மாவிடம் கன்சிஸ்டன்சி இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த சீசனில் அபிஷேக் சர்மா 4 போட்டிகளில் விளையாடி 161 ரன்களை விளாசி இருக்கிறார்.

குறிப்பாக சிஎஸ்கே அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 4 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 37 ரன்களை விளாசினார். குறிப்பாக முகேஷ் சவுத்ரி வீசிய 2வது ஓவரில் மட்டும் 3 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 27 ரன்களை விளாசினார். அபிஷேக் சர்மாவின் அதிரடி காரணமாக ஐதராபாத் அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களை குவித்தது.
ஐதராபாத் அணியின் வெற்றிக்கு பவர் பிளே ஓவர்களில் சிஎஸ்கே அணியை விடவும் 16 ரன்கள் அதிகமாக குவித்ததே முக்கிய காரணமாகும். ஏனென்றால் பிட்ச் கொஞ்சம் பவுலிங்கிற்கு சாதகமாக மாற்றமடைந்ததை உணர்ந்த அபிஷேக் சர்மா, பவர் பிளே ஓவர்களை நன்றாக பயன்படுத்தி ரன்களை குவித்தார். இங்கு தான் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கோட்டைவிட்டுள்ளார்.
ஏனென்றால் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 21 பந்துகளில் 26 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் பவர் பிளே ஓவர்களில் ரன்களை கொஞ்சம் கூடுதலாக சேர்க்க முயன்றிருந்தால், சிஎஸ்கே அணியின் ஸ்கோர் எளிதாக 180 ரன்களை எட்டியிருக்கும். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் செட்டிலாகுவதற்கு குறைந்தது 10 பந்துகளை எடுப்பது பின்னடைவாக மாறியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டு வருவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள ருதுராஜ் கெய்க்வாட், மொத்தமாக 88 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியிலாவது கம்பேக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.