சென்னை : 2020ஆம் ஆண்டுக்கு பின் ஐபிஎல் தொடரில் அதிகமுறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் இடம்பிடித்துள்ளார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் மூலமாக சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் வாய்ப்பும் பிரகாசமாகியுள்ளது. அடுத்த 5 போட்டிகளில் 3 போட்டியில் வென்றாலே சிஎஸ்கே அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

இதனால் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சியில் முதல்முறையாக சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதை பார்க்க ரசிகர்களும் ஆவலாக உள்ளனர். இந்த சீசனில் கேப்டனாக மட்டுமல்லாமல் பேட்ஸ்மேனாகவும் ருதுராஜ் கெய்க்வாட் அணிக்காக முன் நிற்கிறார். நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 54 பந்துகளில் 3 சிக்ஸ், 10 ஃபோர்ஸ் உட்பட 98 ரன்களை விளாசினார்.
இதனால் ஆட்டநாயகன் விருதையும் ருதுராஜ் கெய்க்வாட் தட்டி சென்றுள்ளார். இதன் மூலம் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். 2020ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு அறிமுகமானதில் இருந்து இதுவரை ஐபிஎல் தொடரில் 11 முறை ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.
இதன் மூலமாக கடந்த 5 சீசன்களில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு பின் 2வது இடத்தில் 9 விருதுகளுடன் கேஎல் ராகுலும், 8 விருதுகளுடன் பட்லர் மற்றும் சுப்மன் கில்லும் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணிக்காக அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில் மைக் ஹசியையும் முந்தி சென்றுள்ளார்.
இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் இது ருதுராஜ் கெய்க்வாட் எரா என்று கொண்டாடி வருகின்றனர். 2020ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு வீரராக அறிமுகமான ருதுராஜ் கெய்க்வாட், 4 சீசன்களில் கேப்டனாக உயர்ந்துள்ளார். கேப்டனான பின் சில வீரர்களுக்கு பேட்டிங் அல்லது பவுலிங்கில் பிரச்சனை ஏற்படும். ஆனால் கேப்டனான பின் ருதுராஜ் கெய்க்வாட்-ன் ஆட்டம் அடுத்த லெவலுக்கு உயர்ந்துள்ளது. இந்த சீசனில் மட்டும் 9 போட்டிகளில் விளையாடி 3 அரைசதம், ஒரு சதம் உட்பட 447 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.