சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தென்னாப்பிரிக்க இளம் வேகப் பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸியை சில ஆண்டுகளுக்கு முன்பே அடையாளம் கண்டு அவரை பயிற்சி கொடுத்து வளர்த்து வருகிறது.
ஆனால், அவரை ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணியை வாங்க விடாமல் செய்து தங்கள் அணிக்கு கொண்டு செல்ல மூன்று அணிகள் திட்டமிட்டு வருகின்றன.
ஜெரால்ட் கோட்ஸி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலேயே இல்லையே. அணியில் இல்லாத அவருக்கு சிஎஸ்கே அணி எப்படி பயிற்சி கொடுக்க முடியும்? என சிலர் கேட்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர்கள் அமெரிக்க டி20 லீக்கில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் என்ற அணியையும், தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் என்ற அணியை வைத்துள்ளது. அந்த இரண்டு அணிகளிலும் வேகப் பந்துவீச்சாளராக ஜெரால்ட் கோட்ஸி இடம் பெற்றுள்ளார்.

சமீபத்தில் நடந்த 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் கோட்ஸி அபாரமாக பந்து வீசினார். 20 விக்கெட்கள் வீழ்த்தியதுடன் அரை இறுதியில் கடைசி சில ஓவர்கள் அவர் வீசியது அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் சிறப்பான தருணம் என்று கூறலாம். இதைப் பார்த்த ஐபிஎல் அணிகள் அவரை வாங்க துடித்து வருகின்றன.
சிஎஸ்கே அணி பெரிய போட்டி இல்லாமல் வாங்கலாம் என திட்டமிட்ட நிலையில் தற்போது மற்ற ஒன்பது அணிகளும் கோட்ஸியை வாங்க முயற்சிக்கும் என கூறப்படுகிறது. அதிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் தங்கள் அணியில் சரியான வேகப் பந்துவீச்சாளர் அமையவில்லை என தேடுதலில் உள்ளன.
அதனால், அந்த மூன்று அணிகளும் ஏலத்தில் கோட்ஸியை வாங்க கடுமையாக முயற்சி செய்யும். இந்த நிலையில் கடும் போட்டிக்கு நடுவே தான் சிஎஸ்கே அணி கோட்ஸியை வாங்க வேண்டும். அது சாத்தியமாகாமல் கூட போகலாம். சிஎஸ்கே அணி ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை ஏலத்தில் பெரிய தொகை கொடுத்து வாங்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.