விசாகப்பட்டினம் : ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் மைல்கல் சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. இந்த சாதனையை எந்த வீரரோ அல்லது அணியோ செய்யவில்லை. மாறாக ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் இதுவரை 12000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன.
2008இல் இருந்து இதுவரை 16 ஐபிஎல் தொடர்கள் நடந்து முடிந்துள்ளன. தற்போது 17வது ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் 11,767 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு இருந்தன. 2024 ஐபிஎல் தொடரில் 12 போட்டிகள் முடிந்து, 13வது லீக் போட்டி நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் மோதிய இந்தப் போட்டியில் டெல்லி அணியின் மிட்செல் மார்ஷ் ஒரு சிக்ஸ் அடித்தார். அதுவே ஐபிஎல் தொடரின் 12000மாவது சிக்ஸ் ஆகும்.

2008 முதல் 2021 வரை ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் சராசரியாக 600 முதல் 700 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு வந்தன. 2018இல் அதிகபட்சமாக 872 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு இருந்தன. ஆனால், 2022 மற்றும் 2023இல் இந்த எண்ணிக்கை 1000த்தை கடந்தது. 2022இல் 1062 சிக்ஸர்களும், 2023இல் 1124 சிக்ஸர்களும் அடிக்கப்பட்டன.
2024 ஐபிஎல் தொடரில் 13வது போட்டியின் போதே 240 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு விட்டது. மொத்தம் 70 லீக் போட்டிகள் மற்றும் அதன் பின் பிளே-ஆஃப் மற்றும் இறுதிப் போட்டி ஆகியவை இருப்பதால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 1500 சிக்ஸர்கள் கூட அடிக்க வாய்ப்பு உள்ளது.
விசாகப்பட்டினத்தில் நடந்த லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. டெல்லி அணியின் டேவிட் வார்னர் 52, ப்ரித்வி ஷா 43, ரிஷப் பண்ட் 51 ரன்கள் குவித்தனர். அந்த அணி மொத்தம் 9 சிக்ஸர்கள் அடித்து இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 192 ரன்கள் என்ற கடின இலக்கு சவாலாக அமைந்தது.